முதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதி!

தனது முதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
19 ஆவது திருத்தத்தை வைத்துக்கொண்டு தன்னால் எதனையும் செய்யமுடியாது என்றும் கூடிய விரைவில் 20 ஆவது திருத்த யோசனையை நிறைவேற்றிவிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற 20 ஆவது திருத்த யோசனை மற்றும் புதிய அரசியலமைப்புப் பணிகள் குறித்து ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தும் சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி –
தற்சமயம் அமுலில் உள்ள 19ஆவது திருத்தத்தினால் எனது கைகள் கட்டப்பட்டுள்ளது. இதனால் 20 ஆவது திருத்த யோசனையை முடிந்தளவில் நிறைவேற்ற வேண்டும். அராஜகத்தை எதிர்க்கின்ற, அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்கின்ற வகையிலான புதிய அரசியலமைப்பு தான் தேவையாக இருக்கிறது.
அத்துடன் இரண்டாவது பதவியாண்டு ஆரம்பிக்கும் முன்னர் புதிய அரசியலமைப்பினை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளேன் என்றார்.
இதேவேளை 20 ஆவது திருத்த யோசனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானம் எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் அறிவிக்கப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் அந்த யோசனை மீது விவாதம் நடத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|