மாசி 19 ஆம் திகதிக்கு முன்னர் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் – 7 இலட்சத்து 47 ஆயிரத்து 93 மாணவர்களுக்கு காலணி வழங்குவதற்கு நடவடிக்கை – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

அடுத்த வருடம் பெப்ரவரி 19 ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாதீட்டில் கல்வித்துறைக்கான ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே தெரிவு செய்யப்பட்ட 7 இலட்சத்து 47 ஆயிரத்து 93 பாடசாலை மாணவர்களுக்கான காலணி வவுச்சர்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பொருளாதார ரீதியில் பின்னடைவை சந்தித்துள்ள மற்றும் கிராமங்களில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இவ்வாறு காலணி வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, வழங்கப்படும் வுவுச்சர் ஒன்று 3,000 ரூபாய் பெறுமதியுடையது என அவர் தெரிவித்துள்ளார்.
தெரிவு செய்யப்பட்ட வர்த்தக நிலையங்களில் வவுச்சர்களை வழங்கி காலணிகளை கொள்வனவு செய்ய முடியும்.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் உரிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அறியப்படுத்துமாறு மாகாண, வலய கல்வி காரியாலயங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
000
Related posts:
|
|