மாங்குளம் நகர் அபிவிருத்திக்காக 200 ஏக்கர் காடுகள் அழிக்கப்படும் – சுற்றாடல் பாதுகாப்புப் பிரிவு அறிவிப்பு!

மாங்குளம் நகரை அபிவிருத்தி செய்வதற்காக வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் காணப்படும் 7200 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட உள்ளதாக சுற்றாடல் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் சஜீவ சாமிகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பனிக்கன்குளம், வன்னிவிளாங்குளம் மற்றும் மாங்குளம் ஆகிய மூன்று பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளே இவ்வாறு அழிக்கப்பட உள்ளன. மூன்று வனப் பிரதேசங்களிலும் சுமார் 986 கிலோ மீற்றர் நீளமுடைய நீர்நிலைகள் காணப்படுகின்றன.மேலும் இந்த வனப்பகுதிகளிலிருந்தே கனகராயன் ஆறு ஊற்றெடுக்கின்றது.இந்த வனப் பகுதிகளில் அதிகளவு காட்டு யானைகள் வாழ்கின்றன.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இந்த வனப் பகுதிகளை அழித்து மாங்குளம் நகரை அபிவிருத்தி செய்ய அப்போதைய அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. தற்போது இந்தத் திட்டத்தை தற்போதைய அரசாங்கம் அமுல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த திட்டத்தின் ஊடாக பாரியளவில் வனப் பகுதிகள் அழிக்கப்படும் எனவும் இதனால் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரிக்கும். – என்றார்.
இந்த அபிவிருத்தி திட்டம் தொடர்பில் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்ட போதிலும் வனப் பகுதிகளை அபிவிருத்தித் திட்டத்திற்காக அழிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை என வனப் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் அனுர சதுரசிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|