புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்காக மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு – கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்குமாறு கல்வியமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் நேற்றையதினம் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் கல்வி அமைச்சரிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
புலமைப்பரிசில் பெறுபேறுகள் தொடர் பாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
புலமைப்பரிசில் பெறும் மாணவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 750 ரூபாவை 1000 ரூபாவாக அதிகரிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கோரினார்.
புலமைப்பரிசில் பெறுவோரின் எண்ணிக்கை 20,000-இல் இருந்து 30,000 ஆக அதிகரிக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அதேவேளை நேற்றுமுன்தினம் இரவு வெளியாகிய தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் அதிகூடிய சித்திகளை 5 மாணவர்கள் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த 5 மாணவர்களும் 198 புள்ளிகளை பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு பரீட்சைக்கு 332,949 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர், அவர்களில் 50,664 பேர் வெட்டுப்புள்ளிகளில் சித்தியடைந்துள்ளனர்.
இவ்வருடம் வெட்டுப்புள்ளியை தாண்டிய மாணவர்களின் வீதம் 15.22வீதம் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 14.64 சதவீதமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|