புதிய அரசமைப்புக்கான பொது வாக்கெடுப்பு இவ்வருடம் நடக்கும் மகிந்தானந்த அழுத்கமகே தகவல்!

இந்த வருடம் உள்ளுராட்சிச் சபைத் தேர்தலோ அல்லது மாகாணசபைத் தேர்தலோ இடம்பெறாது, புதிய அரசமைப்புக்கான பொதுவாக்கெடுப்பு மாத்ததிரம்தான் நடைபெறும் என்று மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் நிச்சயம் இடம்பெறும் என்று அரசு கூறி வருகின்றமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது.
அரசு இப்போது உள்ள நிலையில் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களை இந்த வருடம் நிச்சயம் நடத்தாது. ஒருவேளை இந்த வருடம் நடத்துவதற்கு மே தினத்துக்கு முன் அரச தீர்மானித்திருந்தால் எமது மே தினக் கூட்டத்துக்கு வந்த மக்கள் வெள்ளத்தைப் பார்த்துவிட்டு தீர்மானத்தை மாற்றியிருக்கும்.
அரசுக்கு இருந்த தோல்விப் பயம் மே தினக் கூட்டத்தின் பின் மேலும் அதிகரித்துள்ளது. தோல்வி உறுதியாகியுள்ளது. இதனால் தேர்தல்கள் இந்த வருடம் இடம்பெறாது என்று உறுதியாகக் கூற முடியும். ஆனால் அடித்துக் கூறுகிறேன். புதிய அரசமைப்புக்கான பொது வாக்கெடுப்புத்தான் இந்த வருடம் இடம்பெறும். நாட்டை இரண்டாகப் பிரிக்கும் புதிய அரசமைப்புத் தயாரிப்புப் பணி தொடர்கின்றது. வெகுவிரைவில் அதன் பணி நிறைவடைந்து விடும். அதற்கான பொது வாக்கெடுப்பை நடத்தி நாட்டைப் பிரித்துக் கொடுப்பதில் தான் அரசு அக்கறை காட்டுகின்றது என்றார்.
Related posts:
|
|