பல்வேறு முக்கிய சட்டமூலங்களை நிறைவேற்றும் நோக்குடன் இன்றுமுதல் 4 நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் முன்னெடுப்பு!

பாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்ற காலை ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் தொடர்ந்து 4 நாட்களுக்கு முன்னெடுப்பதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்..
தேருநர்களைப் பதிவுசெய்தல் திருத்தச் சட்டமூலம், வேலையாட்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் திருத்தச் சட்டமூலம் மற்றும் இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டமூலம் என்பன இத்தினங்களில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்..
அத்துடன், சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் மேலும் ஆராய்ந்த பின்னர் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருப்பதாகவும் தசநாயக்க குறிப்பிட்டள்ளார்.
ஓகஸ்ட் 03 ஆம் திகதியான இன்று சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதமாக இலங்கை மத்திய வங்கியின் 2020ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை குறித்த விவாதம் இடம்பெற்றன.
ஓகஸ்ட் 04 ஆம் திகதி பிற்பகல் 4.30 மணிமுதல் பிற்பகல் 5.30 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை குறித்த விவாதம் இடம்பெறவிருப்பதாகவும் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
மறுநாள் 05 ஆம் திகதி முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 4.30 மணிவரை இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டமூலம் மற்றும் செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்ட இலக்கம் 14/2008 இன் கீழான கட்டளைகளும்,
ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் 2021ஆம் ஆண்டுக்கான குறைநிரப்பு பிரேரணை என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
அன்றையதினம் பிற்பகல் 4.30 மணிமுதல் 5.30 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை குறித்த விவாதமும் நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓகஸ்ட் 06 ஆம் திகதி முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 4.30 மணி வரை சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் மற்றும் குடிவருவோர், குடியகல்வோர் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன இரண்டாவது நாள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருப்பதாகவும் செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
அன்றையதினம் பிற்பகல் 4.30 மணிமுதல் 5.30 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை குறித்த விவாதமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|