பண மோசடி தொடர்பில் சானுக்க ரத்வத்த உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல்!

பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சானுக்க ரத்வத்த உள்ளிட்ட ஐவரும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் 4.2 பில்லியன் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, என்ரிஸ்ட் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபையின் ஐந்து உறுப்பினர்கள் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று பகல் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
மத்திய வங்கியின் நான்கு நிறுவனங்கள் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றின் பிணையங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை தொடர்பில் மத்திய வங்கியினால் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், இந்த நிதிமோசடி காரணமாக 12 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.
Related posts:
|
|