பட்டதாரிகள் தேர்வுக்கு 203 பேர் தோற்றவில்லை – மாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவிப்பு!

வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான இரண்டு வருட பயிற்சி நியமனத்துக்கான நேர்முகத் தேர்வுக்காக அழைக்கப்பட்ட பட்டதாரிகளில் 203 பேர் நேர்முகத் தேர்வுக்குத் தோற்றவில்லை என மாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலையற்ற பட்டதாரிகளில் 20 ஆயிரம் பேருக்கு அரச நியமனம் வழங்கும் நோக்கில் மாவட்டச் செயலகம் தோறும் தற்போது நேர்முகத்தேர்வு இடம்பெறுகின்றது. இதன் பிரகாரம் வடக்கில் வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்ட நேர்முகத் தேர்வுகள் முழுமை பெற்ற நிலையில் மொத்தமாக அழைக்கப்பட்ட பட்டதாரிகளில் 203 பேர் நேர்முகத் தேர்வுக்கு தோற்றவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மாவட்டச் செயலகங்களில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மற்றும் பதியத் தவறியவர்களில் மீள் பதிவு செய்தவர்கள் என அனைவரும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.
இதன் அடிப்படையில் வவுனியா மாவட்டத்;தில் 651 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு கடந்த 16 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரையில் 6 நாள்களாக நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்றன. இதன்போது 529 பட்டதாரிகள் மட்டுமே சமூகமளித்தனர் என்று கண்டறியப்பட்டது.
இதன் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட பின்பு நேர்முகத் தேர்வுக்கு அழைத்த பட்டதாரிகளில் 132 பேர் நேர்முகத் தேர்விற்கு தோற்றவில்லை.
இதேபோன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகங்களில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மற்றும் பதியத் தவறியவர்களில் மீள் பதிவு செய்தவர்கள் என மொத்தமாக 443 பட்டதாரிகளுக்காக கடந்த 23 மற்றும் 24 ஆகிய இரு நாள்களாக நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்றன. இதன்போது அழைக்கப்பட்ட 443 பட்டதாரிகளில் இருந்து 372 பட்டதாரிகள் மட்டுமே சமூகமளித்தனர்.
இதன் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் 71 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றாதமையினால் இரு மாவட்டங்களிலும் 203 பட்டதாரிகள் நேர்முகத் தேர்வுக்கு தோற்றவில்லை என மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.
Related posts:
|
|