நிரந்தர தீர்வை காண தமிழ் அல்லது முஸ்லிம் தரப்பு விட்டுக் கொடுக்க வேண்டும் – இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க கோரிக்கை!

அம்பாறை வட்டமடு காணி விவகாரத்தைத் தீர்க்க, தமிழ், முஸ்லிம் தரப்புக்களில் எவரேனும், ஏதோ ஒரு வகையில், விட்டுக்கொடுப்பை செய்ய வேண்டி ஏற்படும் வன ஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹாரிஸ் சபையின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
இதற்குப் பதிலளித்த வன ஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க –
இந்தப் பிரச்சினை மிக நீண்டகாலமானதாகும் என்றும், இதில் ஏதோ ஒரு வகையில், இனரீதியான மாறுபாடுடைய பிரச்சினையும் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இது தங்களது மேய்ச்சல் தரை என தமிழர்கள் கூறுகின்றனர். தங்களது வயல் நிலம் என முஸ்லிம்கள் கூறுகின்றனர். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர், பணிப்பாளர் நாயகம் அங்குச் சென்று பார்த்து, சில பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
இதனைத் தீர்க்கச் சென்றால், எவருக்காவது, ஏதோ ஒரு வகையில், விட்டுக்கொடுப்பை செய்யவேண்டி ஏற்படும். எனவே, நாம் இதில் தலையிட்டு. நியாயமான தீர்வை வழங்கவே எதிர்பார்க்கின்றோம்.
மேன்முறையீட்டு நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு ஒன்றும் உள்ளது. எனவே, இந்த விடயத்தில் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
அதேநேரம், அதிகாரிகள் இந்த விடயத்தில் அறிக்கை சமர்ப்பித்ததன் பின்னர், தங்களது மட்டத்தில் எவ்வாறான நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவதானம் செலுத்துவதாக இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|