தொடரும் சீரற்ற வாநிலை – யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வருவதை தாமதிக்குமாறு பணிப்பாளர் அறிவிப்பு!

Tuesday, November 9th, 2021

கனமழையின் தாக்கத்தினால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சாதாரண சிகிச்சை பெற வருவோர் சற்று தாமதமாக வருமாறு யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்த. சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்

யாழ்ப்பாண குடாநாட்டில் பெய்துவரும் கனமழை மற்றும் தாதியர்கள், துணை மருத்துவ சேவை உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தின் காரணமாக யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையின் கிளினிக் பிரிவு மற்றும் சாதாரண பிரிவுகளில் செயற்பாடு மந்த கதியில் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே பொதுமக்கள் தற்போதுள்ள மழை குறைவடைந்த பின்னர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு வந்து  சிகிச்சையினை பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளதோடு சாதாரண சிகிச்சை பெறுவோர் தற்போதைய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு வருகைதந்து அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதை தவிர்க்குமாறும் கோரியுள்ளார்.

மேலும் கிளினிக் பகுதி மற்றும் இது இருதய சிகிச்சை கிளினிக் பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி நிற்பதன் காரணமாக தற்போது சிகிச்சைகள் இடம் பெறாத நிலை காணப்படுகின்றது எனவே பொதுமக்கள் சாதாரண சிகிச்சை பெற வருவோர் மழை முடிந்த பின்னர் வருகை தந்து சிகிச்சையினை பெற்றுக் கொள்ளுமாறும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் அறிவித்துள்ளார்

எனினும் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் ஏனைய விசேட வைத்திய சேவைகள் அனைத்தும் இடம்பெறுவதாகவும் எனினும் சாதாரண சிகிச்சைகள் மாத்திரம் தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: