தொடரும் அடைமழையால் யாழ்ப்பாணத்தில் வௌ்ள அபாயம் – அச்சத்தில் திணறும் மக்கள்!

Saturday, December 5th, 2020

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புரவி சூறாவளியால் யாழ். மாவட்ட மக்கள் தொடர்ந்தும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

அத்துடன் யாழ். மாவட்டத்தில் தொடர்ந்தும் மழையுடனான வானிலை நிலவுவதால் சில பகுதிகளில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது.

மழை நீடிக்குமாயின் தாழ்நில பகுதிகளில் வௌ்ள நிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என யாழ். மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது..

யாழ். மாவட்டத்தில் இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் பிரகாரம் 54,163 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்படடுள்ள மக்களை இடர் நிலையிலிருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். மாவட்ட செயலகம் குறிப்பிட்டுள்ளது..

இதேவேளை புரவி சூறாவளியால் கிளிநொச்சி மாவட்டத்தில் 4,334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குளங்களை அண்மித்து வாழும் மக்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் 1,925 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 2,227 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த குடும்பங்களை சேர்ந்த 7,784 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான நடவடிக்கைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல் குறிப்பிட்டார்.

புரவி சூறாவளியால் வவுனியா மாவட்டத்தில் 137 குடும்பங்களை சேர்ந்த 424 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் 79 குடும்பங்களை சேர்ந்த 265 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை வடக்கு, வட மேல் மாகாணங்களில் தொடர்ந்தும் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இந்த மாகாணங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் குறிப்பிடுகின்றார். இதேவேளை, புத்தளம் தொடக்கம், மன்னார் , காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக காணப்படும் என வானிலை அதிகாரி எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: