தற்கொலை குண்டு தாக்குதலின் கோரமுகத்தை புனித அந்தோனியார் ஆலயத்தில் காணமுடிந்தது – இந்தியப் பிரதமர்!
Saturday, June 15th, 2019
இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலின் கோரமுகத்தை, அண்மையில் கொழும்பிற்கு சென்றிருந்த போது புனித அந்தோனியார் ஆலயத்தில் காணமுடிந்ததாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தஜிகிஸ்தான் நாட்டில் நேற்று இடம்பெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இருநாள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“தீவிரவாதம் ஒழிக்கப்பட்ட ஒரு சமுதாயத்தினை உருவாக்க இந்தியா எப்போதும் துணையாக இருக்கும். இந்நிலையில், தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்திய பயங்கரவாத ஒழிப்பு பிரிவு அக்கறை காட்ட வேண்டும். அத்துடன், பயங்கரவாத தீமைகளில் இருந்து மக்களை காப்பாற்ற இந்த அமைப்பில் உள்ள நாடுகள் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும்.
இதேவேளை, அண்மையில் இலங்கைக்கு சென்றிருந்த போது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டு தாக்குதலின் கோரமுகத்தை, புனித அந்தோனியார் ஆலயத்தில் காணமுடிந்ததாக” அவர் மேலும் கூறியுள்ளார்.
இதனிடையே பயங்கரவாதத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நாடுகள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
அத்துடன் பயங்கரவாதமற்ற நாடாக இந்தியாவை மாற்றுவதில் தாம் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக செயல்படுவதற்கு தங்களது உறுதிப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். அத்துடன், பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கு உலகநாடுகளின் தலைவர்கள் அனைவரும் இணைந்து விசேட மாநாடொன்றை நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து மோடி வலியுறுத்தியுள்ளார்.
Related posts: