தமிழர்கள் தமது கலாசாரங்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்: வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு!

தமிழர்கள் எந்த மூலையில் இருந்தாலும் தமது கலாசாரங்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார்.
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 13 ஆவது சர்வதேச மாநாடு யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் இன்று சனிக்கிழமை(05) காலை- 09 .30 மணியளவில் ஆரம்பமாகியது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்துவரும் தற்காலத்தில் தமிழ் கலாசாரத்தினைப் பாதுகாப்பதற்கு புலம்பெயர் வாழ் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் எடுத்துவரும் முயற்சிகளை நான் வரவேற்கிறேன்.
சமூகங்களின் கலாசாரத்தினைப் பாதுகாப்பது கடினமாகவுள்ள இக்கால கட்டத்தில் இதுபோன்றதொரு மாநாட்டை நடாத்துவது பாராட்டத்தக்க விடயம். இவ்வாறானதொரு மாநாட்டை நடாத்துவது என்பது மிகவும் கஸ்டமான காரியம்.
நீண்டகாலமாக எம் முன்னோர்கள் பின் பற்றிவந்த நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாம் ஏனைய பழக்க வழக்கங்களோடு, கலாச்சாரங்களோடு கலந்து செல்கின்ற காலம் தற்போதய காலமாகும்.
சீன தேசத்திற்கு விடுதலையை முதலில் பெற்றுக் கொடுத்த தலைவர் மாவோ சேதுங் அவர்களின் பார்வையில் கலாச்சாரம் என்பது அரசியல் பொருளாதாரம், காலநிலை, புவியல் ஆகியவற்றின் நம்பிக்கை கலப்பினால் ஏற்படுவது என தெரிவித்துள்ளார். இதுபோன்று உருவாகிய தமிழ் கலாச்சாரம் நீண்டகாலமாக தமிழ் மக்களுக்கு சேவையாற்றியிருக்கின்றது என நான் எண்ணுகின்றேன்.
சங்கீதம், இசை, கவிதை, சித்திரம், சிற்பம், கட்டிடக்கலை, மொழி, சமயம் ஆகிய அனைத்திலும் உள்ள விசேடமான வித்தியாசம் கலாச்சாரம் ஆகும். அனைத்திலும் ஒரு வேறுபாடு இருக்கிறது . தமிழ் கலாச்சாரத்திற்கும், சீனக்கலாசாரத்திற்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும் மற்றய கலாச்சாரத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது.
அதுதான் இயற்கையும் கூட
எனது பார்வையில் இந்த உலகம் அழகிய பூந்தோட்டம் இந்த தோட்டத்திலே பூக்கின்ற பூக்கள் பல நிறங்களில், பல மனங்களில், பல வடிவங்களில் அமைந்திருக்கின்றது. அதனால்தான் இந்தத் தோட்டம் அழகாக உள்ளது. ஒரே மாதிரியான பூக்கள் இருந்தால் அது அழகாக இருக்காது. இதேபோன்று இந்த உலகில் பல கலாச்சாரம் இருப்பது அழகைக் கொடுக்கின்றது.
இந்தத் தமிழ்ப் பண்பாட்டு இயகத்தின் பிரதானமான நோக்கம் தமிழ் மக்களின் கலாச்சாரங்களை பேணி பாதுகாப்பது மட்டுமே. இந்த நவீன காலத்தில் முன்னைய காலத்தினை விட பல வித்தியாசங்களை காண முடியும். முன்னைய காலத்தில் இனம், தேசம், கலாச்சாரம் என்று வெவ்வேறாக இருந்துவந்தது.
ஆனால் தற்காலத்தில் சகல நாடுகளும், சகல நகரங்களும், பொருளாதாரங்களும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்துள்ளது.
இந்த நவீன உலகம் பணம், விஞ்ஞானம், வியாபாரம் போன்ற பலவற்றை தொழில்நுட்பம் ஊடாக விரைவாக சகல நாடுகளையும் ஒன்றிணைத்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
விரைவில் பொலிஸ் திணைக்களத்தில் தமிழ் தொலைத்தொடர்பு சேவை!
இந்தியா - காங்கேசன்துறைக்கு இடையில் பயணிகள் கப்பல் சேவை மார்ச் மாதம் ஆரம்பம் - ஜனாதிபதியின் வழங்கிய ...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம் - பல்வேறு விடயங்கள் தொட்ர்பில் இறுதித்...
|
|