சீன ஜனாதிபதி – பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட சந்திப்பு.

2017 உலக பொருளாதார மாநாடு சுவிற்சர்லாந்தின் டாவோஸ் நகரில் ஆரம்பமானது. உலகப் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமானால் சுதந்திர வர்த்தகத்தையும் திறந்த நிலையையும் உறுதிப்படுத்தி தற்காப்புப் பொருளாதாரத்தை முழுமையாக நிராகரிக்க வேண்டுமென்று சீன ஜனாதிபதி ஷி ஜிங் பிங் தனது ஆரம்ப உரையில் தெரிவித்துள்ளார்..
பொருளாதார யுத்தத்தில் வெற்றிபெற்றவர்கள் எவரும் இல்லை. அதனால் எதிர்கால உலக பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகள் அனைத்து நாடுகளுக்கும் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கக்கூடிய ஐக்கியம் நிறைந்த கூட்டு முயற்சியாக இருக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த மாநாடு ஆரம்பிப்பதற்கு முன்னர் சீன ஜனாதிபதி இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் பங்களாதேஷ் சேர்பியா சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளின் அரச தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.
இலங்கையில் முன்னெடுக்கப்படும் சீன முதலீடுகள் குறித்தும் அங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் அதனை அண்டியுள்ள முதலீட்டு வலயம் கொழும்பு நிதி நகரம் என்பன குறித்து அங்கு கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. ஒரே பாதை ஒரே கரை என்ற செயற்திட்டத்தின் கீழ் தற்போது சுமார் 100 நாடுகளுடனும் நிறுவனங்களுடன் சீனா பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக சீன ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சீனா ஜனாதிபதி ஒருவர் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்றுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். அதனால் இம்முறை மாநாடு வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாக அமைந்துள்ளதென வரவேற்புரை நிகழ்த்திய மாநாட்டின் நிறைவேற்றுத் தலைவர் பேராசிரியர் க்ளோஸ் ஸ்வப் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட இலங்கைத் தூதுக்குழுவை சந்தித்த ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியின் தலைவர் ஜீன் லீக் குவான் இலங்கைக்கு ஆதரவு வழங்க தானும் தனது நிறுவனமும் எப்போதும் முன்னுரிமையளித்து செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
உட்கட்டமைப்பு வசதிகள் பெருந்தெருக்கள் ரயில் பாதை துறைமுகங்கள் நகர அபிவிருத்தி போன்ற துறைகளுக்கு நிதியுதவிகளையும் கடன் வசதிகளையும் வழங்க தமது வங்கி நடவடிக்கை எடுக்குமென்று அவர் வலியுறுத்தினார்.
அமைச்சர் ரவி கருணாநாயக்க ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத்த ஆரியசிங்க பிரதமரின் மேலதிக செயலாளர் சமன் அத்தாவுத ஹெட்டி ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Related posts:
|
|