சட்டமாக்கப்படுகின்றன சுகாதார வழிகாட்டல்கள் – இரு தினங்களில் வர்த்தமானி வெளியிடப்படும் என சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

Saturday, August 14th, 2021

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்படும் சில வழிகாட்டல்களை சட்டமாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாக அறிவித்துள்ள சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி இந்தியாவிடமிருந்து வாராந்தம் ஒக்சிஜனை கொள்வனவு செய்யவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்..

ஊடக நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு பயன்படுத்துவதற்காகவே இந்தியாவிடமிருந்து ஒக்சிஜன் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் அதற்கமைய, வாராந்தம் 100 மெட்ரிக் தொன் ஒக்சிஜனை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அடுத்தவாரம் கொள்வனவு நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதுடன், தேவை பூர்த்தியாகும்வரை கொள்வனவு முன்னெடுக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், சுகாதார ஒழுங்கு விதிகளை சட்டமாக்குவதற்கான வர்த்தமானியை எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை (16) வெளியிடவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி ஏற்றல் மற்றும் பின்பற்றவேண்டிய சுகாதார ஒழுங்கு விதிகள் தொடர்பில் தொடர்ச்சியாக பொதுமக்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் இதன்போது ஊடக நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் சுகாதார அமைச்சரிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: