கொரோனா மூன்றாவது அலையில் 19 கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழப்பு – சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் எச்சரிக்கை!

கொரோனா மூன்றாவது அலையில் 19 கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதேநேரம் உயிரிழந்த அனைவரும் எவ்விதமான தடுப்பூசியையும் பெற்றுக்கொண்டிருக்கவில்லை என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்துள்ளார்.
இதனால், நாட்டிலுள்ள அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் கொரோனா தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கான ஆலோசனைகளை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாகவும் ரஞ்சித் பட்டுவன்துடாவ குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும் தங்களுக்கான தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள வேண்டும் எனவும், அதற்கான திகதியை அந்தந்த பகுதிக்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரிகளூடாக அறிந்துகொள்ளுமாறும் ரஞ்சித் பட்டுவன்துடாவ மேலும் தெரிவித்துள்ளார்..
அதேநேரம் தற்போது பரவும் டெல்டா வைரஸ் பிறழ்வானது, மனித உடலில் விரைவாக உட்புகக்கூடியது எனவும் டெல்டா கொரோனா பிறழ்வு தொற்றிய ஒருவரின் உடலில் மிக விரைவாக வைரஸ் அதிகளவில் உற்பதியாவதுடன், ஓரிரு நாட்களில் அதற்கான அறிகுறிகள் தென்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அணிந்திருக்கும் முகக்கவசத்தை கழற்றி வைக்கும் சில விநாடிகளில் கூட டெல்டா வைரஸ் தொற்றுவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால், சனநெரிசல் மிக்க பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் சமூக இடைவெளியை கடுமையாக பின்பற்றுமாறும் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|