“ஐ.நாவின் பிரேரணைக்கு நாம் அஞ்சவோ அடிபணியவோ மாட்டோம்” – பிரதமர் மஹிந்த ராஜபக்ச திட்டவட்டம்!

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக வெளிநாடுகள் எத்தனை பிரேரணைகளையும் கொண்டுவரலாம். அவை நிறைவேறினால் என்ன, நிறைவேறாவிட்டால் என்ன? அதனால் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச எமது அரசின் வெளிநாட்டுக் கொள்கை நிலைப்பாட்டில் நாம் மாற்றம் எதையும் செய்யவேமாட்டோம் எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46 ஆவது அமர்வு நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில் இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்..
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –
இம்முறை பிரேரணையைத் தோற்கடிக்க வேண்டும் என்பதில் எமது நட்பு நாடுகள் உறுதியாக உள்ளன.
இறுதியில் என்ன நடந்தாலும் எமது அரசின் வெளிநாட்டுக் கொள்கை நிலைப்பாட்டில் நாம் மாற்றம் எதையும் செய்யவே மாட்டோம்.
எமது புதிய அரசு பதவியேற்றவுடன் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கொள்கை விளக்க உரையில் அரசின் நிலைப்பாடுகளை தெளிவாக வெளியுலகத்துக்கு எடுத்துக் கூறியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சரும் தற்போது ஜெனிவாக் கூட்டத்தொடரில் இலங்கையின் நிலைப்பாட்டை எடுத்தியம்பியுள்ளார்.
எனவே, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் மிரட்டல்களுக்கும், அவருக்கு ஆதரவாக இருக்கும் சில நாடுகளின் கூட்டிணைவால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கும் நாம் அஞ்சவும் மாட்டோம்; அடிபணியவும் மாட்டோம்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|