எதிர்வரும் 13 மற்றும் 14 அம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் வெப்பம் உச்சம்பெறும்! – வளிமண்டலவியல் திணைக்களப் பொறுப்பதிகாரி பிரதீபன்

Friday, April 8th, 2016

நாட்டின் வெப்பத்தின் கொடுமை அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் புதுவருட தினத்தன்றும், மறுநாளும் தற்போதுள்ள வெப்பநிலையை விட மேலும் அதிகரித்த வெப்பநிலை காணப்படும் என்று திருநெல்வேலியிலுள்ள வளிமண்டலவியல் திணைக்களப் பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த காலப்பகுதிக்குள் சிறுமழை பெய்ய வாய்ப்புள்ளபோதும், அதனைப் பெரியளவில் எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –

வடக்கில் நேற்றுவரை வடக்கு- கிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்று நிலவிய நிலையில் நேற்றுப் பிற்பகலிலிலுந்து இடைக்காலப் பருவப் பெயர்ச்சிக் காற்று நிலவுகிறது இதனால் பிற்பகலில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை அல்லது மழையின்றி இடி, மின்னல் உருவாக வாய்ப்புள்ளது. அத்தகைய மழை சிறியளிலேயே இருக்கும்.

தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள வெப்பநிலையைவிட பிற மாகாணத்தில் வெப்பநிலை அதிகரித்துள்ளது. இந்த வெப்பநிலை அதிகரிப்பு பிரதேசம் தோறும் மாற்றமடைந்து வருகிறது.இந்த நிலையில் எதிர்வரும் 14ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வெப்பம் தற்போதுள்ளதை விட மேலும் அதிகரித்துக் காணப்படும். அதற்கு மறுநாளும் அதிகரித்த வெப்பநிலை காணப்படும். அதற்கேற்றதாக வடக்கில் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது.

தற்போது யாழ்ப்பாணத்தில் 36.3 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. இடிமுழக்கம் மற்றும் மின்னலின்போது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: