ஊடகங்கள் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டும் – அமைச்சர் ரவூப் ஹக்கீம்!

ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செய்திகளை வெளியிட வேண்டும் எனவும், சமூகமட்டத்தில் பிரச்சினைகளை தோற்றுவிக்கும் வகையிலும், அப்பாவி முஸ்லிம்களை குற்றமிழைத்தவர்களாக காட்ட முற்படும் வகையில் செய்திகளை வெளியிடக் கூடாது எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் தீவிர தேடுதல் வேட்டை காரணமாக பல பொருட்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இத்தேடுதல் வேட்டைகளின் போது சில ஊடகங்கள் நேரடியாக அழைத்துச் செல்லப்படுகின்றன எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
முஸ்லிம் சமூகத்தையும் குற்றவாளிகளாக காட்டும் வகையில் சில பிரசாரங்கள் இடம்பெறுகின்றன. பொறுப்புணர்வுடன் மக்களின் உணர்ச்சிக்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும்.
தீவிரவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் அடியோடு ஒழிக்க முஸ்லிம் சமூகம் தமது முழுமையான ஒத்துழைப்பை பாதுகாப்புத்துறைக்கு வழங்கும். முஸ்லிம்களின் துளியளவும் ஆதரவில்லாத ஒரு சிறிய தரப்பே இந்த பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியுள்ளது. அதற்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் குற்றவாளிகளை போன்று சித்தரிப்பதை அனுமதிக்க முடியாது.
ஊடகங்களின் இத்தகைய நடவடிக்கைகளினால் பிரச்சினைகள் தோற்றுவிக்கப்படும் எனவும் ஊடகங்களும், அரசியல்வாதிகளும், பாதுகாப்புத்துறையினரும் இதுகுறித்து உன்னிப்பாகவும் பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் வேண்டுகோள் விடுத்தார்.
Related posts:
|
|