உண்மை விலைகளை தெளிவாக ஆடைகளில் பொறிக்க வண்டும் – பாவனையாளர் அதிகாரசபை அறிவுறுத்து!

புடவை வியாபார நிலையங்களில் ஆடைகளில் குழுக்குறியீடு விலை பொறிக்கப்படாமல் அவற்றின் உண்மையான விலைகள் தெளிவாகப் பொறிக்கப்பட வேண்டும். அவ்வாறு பொறிக்கப்படாத கடைகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் யாழ்.மாவட்டப் பொறுப்பதிகாரி த.வசந்தசேகரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
அனேகமான புடவை வியாபார நிலையங்களில் அனைத்து வகையான ஆடைகளிலும் புள்ளி அடிப்படையில் குழுக் குறியீட்டு முறையில் விலைகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு விலைகள் பொறிக்கப்பட்டுள்ளமையால் ஆடைகளின் சரியான விலைகளைக் கொள்வனவு செய்பவர்கள் புரிந்து கொள்ள முடியாத நிலையில் திண்டாடுகின்றனர். பண்டிகை காலங்களில் இவ்வாறான புள்ளி அடிப்படை விலைகள் மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்துகின்றது. தற்போது பண்டிகை காலமும் நெருங்கி வருகின்றன.
அனைத்துப் புடைவை வியாபாரிகளும் தமது கடைகளில் உள்ள ஒவ்வொரு ஆடைகளுக்கும் புள்ளி விபரங்கள் அடிப்படையில் விலைகளைத் தவிர்த்து பொதுமக்கள் விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் அதன் உண்மையான விலைகள் தெளிவாகப் பொறிக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாமால் புள்ளி அடிப்படையில் குழுக்குறியீடு முறை விலை குறிக்கப்பட்டிருந்தால் அந்தக் கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்தக் குழுக்குறியீட்டு முறையில் உள்ள விலைகளை கடைகளில் நிற்பவர்களே பல விலைகள் சொல்வதால் கொள்வனவு செய்பவர்கள் குழம்புகின்றனர். இது தொடர்பில் பாவனையாளர் அதிகாரசபைக்கு இதுவரை 4 முறைப்பாட்டுக் கடிதங்கள் கிடைத்துள்ளன.
Related posts:
|
|