உக்ரைன் பேச்சு குழுவில் ரஷ்ய உளவாளி – உக்ரைன் பாதுகாப்பு அமைப்பு சுட்டுக் கொன்றுள்ளதாக தகவல்!

ரஷ்யாவுடனான உக்ரைன் பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றிருந்த ஒருவர் ரஷ்ய உளவாளி என்பதை உக்ரைன் பாதுகாப்பு அமைப்பு கண்டுபிடித்துள்ளதாகத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து அவரை உக்ரைன் பாதுகாப்பு அமைப்பு சுட்டுக் கொன்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவர் தேசத்துரோகத்தில் ஈடுபட்டதால்தான் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதை உக்ரைன் எம்.பி. அலெக்சாண்டர் டுபின்ஸ்கி உறுதிப்படுத்தி டெலிகிராம் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு எம்.பி.யான ஒலெக்சி ஹோன்சரெங்கோ டெலிகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், டெனிஸ் கிரீவின் தேசத்துரோகம் குறித்து உக்ரைனின் பாதுகாப்பு சேவை அமைப்புக்கு தெளிவான தகவல்கள் கிடைத்து இருப்பதாக கூறி உள்ளார்.
இதுபற்றி உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவு பிரிவு ஊடக சேவை தனது ‘பேஸ்புக்’ பதிவில், டெனிஸ் கிரீவ் அவர்களின் ஊழியர் என்றும், ஒரு சிறப்பு பணியின் போது கொல்லப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளது. இது உக்ரைனில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெனிஸ் கிரீவ் 2006 முதல் 2008 வரை, எஸ்சிஎம் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்தார். அங்கு அவர் துணை பொது இயக்குநராக இருந்தார். அதைத் தொடர்ந்து ஆஸ்திரிய நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த அவர் பின்னர் உக்ரெக்ஸிம் வங்கியின் மேற்பார்வைக் குழுவிலும் உறுப்பினராக இருந்தார்.
பின்னர் 2010 முதல் 2014 வரை, உக்ரைன் அரசு வங்கி வாரியத்தின் முதல் துணைத் தலைவராகவும் தனியார் ஈக்விட்டி ஃபண்ட் நிறுவனத்திலும் பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த டெனிஸ் கிரீவ் உக்ரைன் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான அண்ட்ரி க்லியூ என்பவரது தீவிர ஆதரவாளராகக் கருதப்படுகிறார். இந்த டிண்ட்ரி க்லியூ உக்ரைனின் முன்னாள் அதிபரும் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றவருமான விக்டர் யானுகோவிச்சின் கூட்டாளியாகக் கருதப்படுகிறது.
உக்ரைன் நாட்டிற்கு எதிரான போரில் வெற்றி பெறும்பட்சத்தில் இந்த விக்டர் யானுகோவிச்சை தான் புதிய அதிபராக நியமிக்க புடின் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|