இலங்கை வந்தடைந்தது கொரோனா தடுப்பூசி – இந்திய உயர்ஸ்தானிகரால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட தடுப்பூசிகள் நாளைமுதல் செலுத்தப்படும் என சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Thursday, January 28th, 2021

பாரத தேசத்தால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.

இதன்போது சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் கொவிட்-19 கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

முன்பதாக பாரத தேசத்தால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றிய இந்திய விமான சேவைக்கு சொந்தமான A I – 281 விஎன்ற சிறப்பு விமானம் இன்று முற்பகல் 11 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

42 பெட்டிகளில் அடைக்கப்பட்ட நிலையில் குறித்த தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று இலங்கை வந்தடைந்த தடுப்பூசிகள் நாளைமுதல் கொழும்பை சுற்றியுள்ள ஆறு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: