இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை பொருளாதார மீட்சிக்கு இந்தியா பூரணமான ஆதரவை வழங்கும் – இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவிப்பு!

Wednesday, May 11th, 2022

இலங்கையின் மிகவும் நெருங்கிய நட்பு நாடென்ற ரீதியிலும் வரலாற்று ரீதியான உறவுகளின் அடிப்படையிலும் இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சி ஆகியவற்றுக்கு இந்தியா பூரணமான ஆதரவை வழங்குவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

அயலுறவுக்கு முதலிடம் என்ற எமது கொள்கைக்கு முக்கியத்துவமளித்து இலங்கையில் தற்போது காணப்படும் நெருக்கடிகளிலிருந்து அம்மக்கள் மீட்சி பெறுவதற்கு ஆதரவளிப்பதற்காக இந்த ஆண்டில் மாத்திரம் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவி இந்தியாவால் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப்பொருட்களின் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக இந்திய மக்களும் உதவிகளை வழங்கியுள்ளனர்.

ஜனநாயக செயற்பாடுகள் ஊடாக வெளிப்படுத்தப்படும், இலங்கை மக்களின் சிறந்த நலன்களின் அடிப்படையில் இந்தியா எப்பொழுதும் தனது நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

000

Related posts: