இரு வாரங்களுக்குள் ஐந்து எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையும் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர நம்பிக்கை!

அடுத்துவரும் இரண்டு வாரங்களுக்குள் ஐந்து எரிபொருள் கப்பல்கள் இலங்கையை வந்தடையும் என்று எரிபொருள் அமைச்சர் கஞ்சன விஜேசேகர நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
11 ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரையான 12 நாட்களுக்குள் குறித்த ஐந்து கப்பல்களையும் வரவழைக்க எதிர்பார்த்திருப்பதாகவும் மின்சக்தி மற்றும் எரிபொருள் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்றையதினமும் நாளையும் பெற்றோல் மற்றும் டீசல் ஏற்றிய கப்பல்கள் இரண்டும், 16 ஆம் திகதி இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் வரும் கடைசி டீசல் கப்பலும், 20 ஆம் திகதிக்கு முன்னதாக கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல் ஒன்றும், 22 ஆம் திகதி இன்னொரு பெற்றோல் ஏற்றிய கப்பலும் இலங்கை வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாளொன்றுக்கு இலங்கையில் டீசல் தேவை ஐயாயிரம் மெட்ரிக் தொன்னாக இருக்கின்றது. கடந்த நாட்களில் 2800 – 3000 மெட்ரிக் தொன் வரையில் நாளாந்தம் டீசல் வழங்கப்பட்டது.
நாளாந்த பெற்றோல் தேவை 3500 மெட்ரிக் தொன்னாகும். கடந்த நாட்களில் நாளொன்றுக்கு 2500 மெட்ரிக் தொன் வரையான பெற்றோலை நாடு முழுவதும் விநியோகித்துள்ளோம்.
அதே நேரம் மண்ணெண்ணெய்யை மட்டும் தெரிவு செய்யப்பட்ட மீனவ மற்றும் கமத்தொழில் செய்கை பிரதேசங்களுக்கு விநியோகித்துள்ளோம் என்றும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தொடர்ந்தும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
இதேநேரம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து ICTA ஆனது நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் இருப்பை சரிபார்க்க இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, தினசரி காலை 9.00 மணிக்கு எரிபொருள் இருப்பு மற்றும் பிற தொடர்புடைய தகவல்கள் இணையதளத்தில் பதிவேற்றப்படும், அதன் பிறகு ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் இணையதளம் புதுப்பிக்கப்படும்.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் டீசல் விநியோக செயற்பாட்டை மட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டீசல் கையிருப்பு குறைந்தளவில் காணப்படுவதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி முன்னுரிமை பட்டியலில் தெரிவு செய்யப் பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரம் டீசல் விநியோகிக்கப்படும் என அதன் செயலாளர் கபில நாதுன்ன தெரிவித்தார்.
தற்போது தினசரி டீசல் விநியோகம் சுமார் 2,500 மெற்றிக் தொன் வரையில் குறைக்கப்பட்டுள்ளதாகவும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் தற்போது சுமார் 40,000 மெற்றிக் தொன் டீசல் மாத்திரமே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|