இரண்டாவது தடுப்பூசியை பெற தவறியவர்களுக்கு எதிர்வரும் 3 ஆம் திகதி சந்தர்ப்பம் – தவறாது பெற்றுக்கொள்ளுமாறு வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு!

இரண்டாவது தடுப்பூசியினை பெற தவறியவர்களுக்கு எதிர்வரும் யூலை 03 ஆம் திகதி சனிக்கிழமை அந்தந்த பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் –
யாழ் மாவட்டத்தில் கடந்த மே மாத இறுதியிலும் யூன் மாத ஆரம்பத்திலும் கோவிட்-19 நோய்க்கு எதிரான சினோபாம் முதலாம் கட்ட தடுப்பூசியேற்றும் பணிகள் இடம்பெற்றன.
அதனைத்தொடர்ந்து இரண்டாம் கட்ட தடுப்பூசியேற்றும் பணிகள் கடந்த யூன் 28 ஆம் திகதிமுதல் யாழ். மாவட்டத்தில் இடம் பெற்றுவருகின்றன.
இந்நிலையில் கடந்த 28 ஆம் திகதி 10 ஆயிரத்து 110 பேரும், 29 ஆம் திகதி 13 ஆயிரத்து 182 பேரும், 30 ஆம் திகதி 10 ஆயிரத்து 90 பேருமாக மொத்தமாக கடந்த மூன்று நாட்களிலும் 33 ஆயிரத்து 382 பேர் யாழ் மாவட்டத்தில் 2 ஆவது தடுப்பூசியினை பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும் இன்று யூலை 1ஆம் திகதி மற்றும் நாளை 02 ஆம் திகதிகளிலும் சுகாதார வைத்திய அதிகாரிகளால் ஒழுங்கு செய்யப்பட்ட நிலையங்களில் தடுப்பூசி வழங்கும் பணிகள் இடம்பெறவுள்ளன.
இந்த ஐந்து நாட்களிலும் இரண்டாவது தடுப்பூசியினை பெற தவறியவர்களுக்கு எதிர்வரும் யூலை 3 ஆம் திகதி சனிக்கிழமை அந்தந்த பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் காலை 8.00 மணி முதல் தடுப்பூசி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் தடுப்பூசி அல்லது வேறு மருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு முதற்கட்ட தடுப்பூசி யாழ் போதனா வைத்திய சாலையிலும், தெல்லிப்பளை, பருத்தித்துறை, சாவகச்சேரி, ஊர்காவற்துறை ஆதார வைத்திய சாலைகளிலும் வழங்கப்பட்டிருந்தது.
இவர்களுக்கான 2 ஆவது தடுப்பூசி எதிர்வரும் யூலை 3 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் அதே வைத்தியசாலைகளில் வழங்கப்படும் எனவம் தவறாது குறிக்கப்பட்ட இந்த தினத்தில் சமுகமளித்து 2 ஆவது தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுமாறும் பொதுமக்களிடம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|