இரண்டாம் தவணைப் பரீட்சை இரத்துச் செய்யப்படமாட்டாது – கல்வி அமைச்சு!

இரண்டாம் தவணைக்கான காலம் குறைவடைந்துள்ள நிலையில் தவணைக்குரிய பரீட்சையை நடத்த வேண்டாம் என இலங்கை ஆசிரியர் சங்கம் முன்வைத்த கோரிக்கையை கல்வி அமைச்சு நிராகரித்துள்ளது.
பாடசாலைகளின் இரண்டாம் தவணைப்பரீட்சைகளை எக்காரணம் கொண்டும் இரத்துச் செய்ய போவதில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலைகள் கடந்த சில வாரங்களாக மூடப்பட்டிருந்ததால், அந்த வாரங்களுக்கான கல்வி நடவடிக்கைகளை நிறைவு செய்ய முடியாமல் போயுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் இரண்டாம் தவணைப்பரீட்சையை நடத்த வேண்டாம் என இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.ரத்னாயக்க, இரண்டாம் தவணைப்பரீட்சைகளை எக்காரணம் கொண்டும் இரத்துச் செய்யப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
“பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படுகின்றன. மாணவர்களின் வருகையிலும் வீழ்ச்சி காணப்பட்டாலும், அடுத்த இரு வாரங்களுக்குள் வழமைக்குத் திரும்பும்.
மாணவர்களின் பாதுகாப்பிற்காக அனைத்துப் பாடசாலைகளிலும் சிறப்பு பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
இதனால் உண்மைக்குப் புறம்பான பரப்புரைகளை நம்பாமல் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு பெற்றோரிடம் கோரப்படுகிறது” என்றும் கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.ரதட்னாயக்க தெரிவித்தார்.
Related posts:
|
|