இந்திய மீனவர்கள் சகலரையும் விடுதலை செய்வதென அரசாங்கம் தீர்மானம்!

இலங்கை கடற்பரப்பை ஊடுருவும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் சகலரையும் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய விடுதலை செய்வதென அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்
கிரியங்கள்ளிய நீர்த்தேக்கத்தை மையமாகக் கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு வள்ளங்கள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் 10 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மீனவ சனசமூக நிலையமும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இநத நிகழ்வு நேற்று இடம்பெற்றது. அத்துமீறிப் பிரவேசிக்கும் மீனவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதன் காரணமாக மீனவர்களின் ஊடுருவல் 50 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்ட ‘ இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் எவரது படகுகளையோ உபகரணங்களையோ கையளிக்கப் போவதில்லை’ என்றும் தெரிவித்தார்.
மீன்பிடிக் கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு தென்னிந்திய மீனவர்களின் அத்துமீறலே பிரதான சவாலாக உள்ளது.இதற்கு இறுதித் தீர்வு காண்பதற்காக இராஜதந்திர மட்டத்தில் பேச்சு நடத்தி வருகின்றோம் என்றும் அமைச்சர் கூறினார். அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தை தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இராஜதந்திர மட்டத்திலான மற்றொரு பேச்சுவார்த்தை ஜனவரி 2 ஆம் திகதி கொழும்பில் நடைபெறுகிறது. தற்பொழுது 122 இழுவைப்படகுகளுடன் மேலும் 140 நாட்டுப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றுடன் கைப்பற்றப்பட்ட உபகரணங்கள் யாவும் அரசுடமையாக்கப்பட்டுள்ளன. அரசுடமையாக்கப்பட்ட படகுகளையோ உபகரணங்களையோ விடுவிக்க மாட்டோம். கைது செய்யப்பட்டுள்ள சகல இந்திய மீனவர்களையும் சட்டமா அதிபரின் ஆலோசனைப் பிரகாரம் விடுதலை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இரு நாடுகளுக்குமிடையிலான நற்புறவை உறுதி செய்யும் வகையில்இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்
Related posts:
|
|