இந்தியாவிலிருந்து நாடு திரும்புவோருக்கு வீடுகள் -மேலதிக மாவட்டச் செயலர்!

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாண மாவட்டத்துக்கு மீள்குடியேறியுள்ளவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு தனியார் நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளதாக யாழ். மாவட்ட மேலதிக செயலர் (காணி) எஸ்.முரளிதரன் தெரிவித்தார்.
மீள்குடியேற்ற மறுசீரமைப்பு சிறைச்சாலைகள் இந்துசமய கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் இந்தியாவிலிருந்து யாழ். மாவட்டத்துக்கு மீள்குடியேறியுள்ள மக்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை யாழ். மாவட்ட செயலகத்தின் காணிக் கிளையில் யாழ். மாவட்டச் செயலக மேலதிக செயலாளர் எஸ்.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது:
போர் மற்றும் அசாதாரண சூழ்நிலைகளினால் எமது பிரதேசத்திலிருந்து இந்தியாவுக்குச் சென்றவர்கள் மீண்டும் இங்கே வந்துகொண்டிருக்கின்றனர். இதுவரையில் ஆயிரத்து 110 குடும்பங்கள் இங்கு வந்துள்ளனர்.
இவர்களுக்கான உதவித் திட்டங்கள் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவர்களில் 25 பேருக்கான வீடுகளை அமைப்பதற்கு தனியார் நிறுவனம் முன்வந்துள்ளன.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான காணியில் 1.8 மில்லியன் ரூபா பெறுமதியான வீடு அமைத்துக் கொடுக்கப்படவுள்ளது என்றார்.
Related posts:
|
|