இணைய குற்றங்கள் வெகுவாக அதிகரிப்பு – மக்களுக்கு இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலப்பகுதியில் நாடு முழுவதும் 3 ஆயிரத்து 900க்கும் மேற்பட்ட இணைய குற்றங்கள் பதிவாயிருப்பதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு பாதுகாப்பு பொறியாளர் ரவிந்து மீகாஸ்முல்ல தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தனியுரிமை மீறல்கள், மோசடிகள், சமூக ஊடக தொடர்பான சம்பவங்கள் மற்றும் ஹேக்கிங் தொடர்பான முறைப்பாடுகள் இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையின் குற்றவாளிகள் சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ளனர் என்பது புலப்படுகின்றது எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுவரை பெறப்பட்ட அனைத்து முறைப்பாடுகளுக்கும் தொழில்நுட்ப உதவியை வழங்கியுள்ளோம். கொரோனா காரணமாக இந்த ஆண்டு இறுதிக்குள் இணைய குற்ற சம்பவங்கள் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
அந்தவகையில் இந்த நேரத்தில் கூடுதல் விழிப்புடன் இருப்பது பொதுமக்களின் கடமையாகும் எனவும் இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் தகவல் பாதுகாப்பு பொறியாளர் ரவிந்து மீகாஸ்முல்ல மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
|
|