அரியாலை அ.த.க பாடசாலை மூடப்படும் அபாய கட்டத்தில் – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்!

Thursday, July 12th, 2018

1928 ஆம் ஆண்டு ஆரம்பிக்கபட்டுக் கல்விமான்களை உருவாக்கிய யாழ்ப்பாணம் அரியாலை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மூடப்படும் அபாய நிலையில் உள்ளதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

யாழ்ப்பாண நகரில் இருந்து சில மைல்கள் தொலைவிலுள்ள அரியாலை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை ஜே.90 கிராம சேவகர் பிரிவிற்கு உட்பட்டுள்ள பாடசாலையாகும். 1928 ஆம் ஆண்டு இந்தப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு பல மாணவர்களை உருவாக்கிய பாடசாலையாகும். நூற்றுக் கணக்கான மாணவர்கள் கல்விகற்ற அதேவேளை அங்கு கற்ற மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கும் சென்றுள்ளனர்.

கடுமையான போர்க் காலங்களிலும் அதிகளவான மாணவர்களுடன் இயங்கிய இந்தப் பாடசாலையில் அப்போது பழமையான கட்டடம் ஒன்றே இருந்தது. தரம் 1 முதல் 9 வரையான மாணவர்கள் கற்கும் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. தகுதியான ஆசிரியர்களும் அங்கு கடமையில் இருந்தனர். ஆனால் இன்று தரம் 1 முதல் தரம் 7 வரை 9 மாணவர்களுடன் அதிபரை விடுத்து மூன்று ஆசிரியர்களுடன் இந்தப் பாடசாலை இயங்குகின்றது.

சென்ற ஆண்டு 18 மாணவர்கள் கல்வி கற்றனர். அவர்களில் ஒன்பது மாணவர்களை வேறு பாடசாலைகளில் கற்பதற்கு அனுமதியளித்து அதிபர் விடுகைப்பத்திரம் வழங்கியுள்ளார். இன்னும் உள்ள மாணவர்களை நீங்களும் வேறெங்காவது செல்லப்போகின்றீர்களா? என அதிபர் அடிக்கடி வினவி வருகின்றார். அதிபர் ஆசிரியர்களுடன் அடிக்கடி முரண்படுவதும் அவர்களில் சிலர் அங்கிருந்து வெளியேறிச் சென்றமையும் ஆதாரங்களாக உள்ளன.

அதிபர் அடிக்கடி பாடசாலையில் இருந்து குறித்த நேரத்திற்கு முன்னரே வெளியேறிச் செல்வதும் அதற்காகத் திணைக்களக் கடமை என சம்பவத்திரட்டுப் புத்தகத்தில் எழுதுவதும் தொடர் கதையாக உள்ளது. இவரது இத்தகைய செயற்பாடு மற்றைய அதிபர்களுக்கு இழுக்காக அமைவதோடு அந்தக் கிராம மக்களின் மனங்களில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது. அதிபர் அடிக்கடி இந்தப் பாடசாலையை மூடிவிடுவோம் என்ற வார்த்தையைப் பிரயோகிப்பதால் இன்னும் உள்ள மாணவர்கள் விடுகைப்பத்திரங்களைப் பெற்று வேறு பாடசாலைகளுக்குச் செல்ல எத்தனிக்கின்றனர்.

போக்குவரத்து வசதிகள் இல்லாத வறுமைக்கோட்டின் கீழுள்ள மக்களின் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட இந்தப் பாடசாலை மூடப்படும் அபாயமான சூழலை அதிபர் உருவாக்கி வருவதும் சகல கல்வித் திணைக்கள அதிகாரிகளுக்கும் தெரிந்த விடயம். இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எஞ்சியுள்ள தகுதியான ஆசிரியர்களும் வேறு இடங்களுக்கு இடமாற்றம் பெற்றுச்செல்வதைத் தவிர வேறு வழிகள் இல்லாது இருக்கின்றனர். காரணம் அதிபர், ஆசிரியர்களையும் நீங்கள் சென்று விடுங்கள் என்றே அடிக்கடி கூறி வருகின்றார்.

பாடசாலை மூடப்படுவதைத் தடுப்பது யார்? இப்பாடசாலையின் அபிவிருத்திக்கு என்ன செய்யலாம் என்பது பற்றி இதுவரை எவரும் சிந்திப்பதாக இல்லை. வெவ்வேறு பிரதேசங்களில் பாடசாலைகள் திறக்கப்படும் நிலையில் 100 வருடங்களை எட்டும் நிலையிலுள்ள பாடசாலையை மூடுவதற்கு எத்தனிப்பது கவலைதரும் விடயம் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts: