அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் விற்கப்படுவதில்லை: மக்கள் சிரமம்!

அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த 3 மாதங்களுககு மேலாக மண்ணெண்ணெய் விற்பனை இல்லாததால் பகுதி விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர் என தெரியவருகின்றது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அனுசரனையுடன் அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையம் நிர்வாகிக்கப்பட்டு வருகின்றது. அங்கு கடந்த டிசம்பர் மாதம் முதல் மண்ணெண்ணெய் விற்பனை இடம் பெறாமல் உள்ளது. இதனால் பெரும் போக விவசாயப் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்களை இயக்குவதற்கும் கடற்தெழிலாளர் பயன்படுத்தும் படகுகளின் வெளி இணைப்பு மற்றும் இயந்திரங்களை இயக்குவதற்கும் பொதுத் தேவைகளுக்கு மண்ணெண்ணெய் பெறுவதில் பொதுமக்கள் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்
எரிபொருள் விற்பனை நிலையத்தில் 1 லீற்றர் எண்ணெய் 44 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்ற நிலையில் பொது வியாபார நிலையங்களில் 60 ரூபாவிற்கு விற்பனை செயப்படுகின்றது. இதன்காரணமாக விவசாயச் செய்கைக்காக பல லீற்றர் கொள்வனவு செய்கின்ற விவசாயிகள் உட்பட தொழிலாழிகள் பருத்தித்துறை எரிபொருள் நிலையத்துக்குச் சென்று கொள்வனவு செய்கின்றனர் .
இது தொடர்பில் முகாமையாளர் தெரிவிக்கையில் – மண்ணெண்ணெய் சேமிக்கப்படும் தாங்கியில் துவாரம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனைச் சீரமைப்பது அல்லது புதிய தாங்கியைக் கொள்வனவு செய்தல் தொடர்பில் பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனமே முடிவு செய்ய முடியும். அவர்களுக்கு இது தொடர்பில் அறிவித்துள்ளோம். இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|