குடாநாட்டில் வெங்காயம் விலை உயர்வு!
Wednesday, May 17th, 2017குடாநாட்டில் வெங்காயத்தின் விலை இந்த வருடம் என்றும் இல்லாத அளவுக்கு உயர்வடைந்துள்ளது. 50 கிலோ வெங்காயத்தின் விலை 10 ஆயிரம் ரூபாவைத் தாண்டியுள்ளது. திருநெல்வேலி உட்பட சந்தைகளில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 250 இலிருந்து 300 ரூபாவரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தரமான வெங்காயத்தைப் பெற்றுக் கொள்ளமுடியாத நிலை ஏற்படுவதுடன் எதிர்காலத்திற்கு தேவையான விதை வெங்காயத்திற்கு பெரும் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் கடந்த கால போகத்தில் மாரி மழை இல்லாமையும் அதேநேரம் கடும் வரட்சி, வெப்பநிலை அதிகரித்துக் காணப்பட்ட முரண்பாடான கால நிலையாலும் வெங்காயப் பயிர்ச் செய்கை பெருமளவில் சேதமடைந்துள்ளது.
சிறுபோகத்தில் நடுகை செய்யப்படும் வெங்காயமே களஞ்சியப்படுத்தப்பட்டு அடுத்த காலபோக பயிர்ச்செய்கையின்போது விதை வெங்காயமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணத்தில் சிறுபோக வெங்காயப் பயிர்ச் செய்கை உரிய அளவு மேற்கொள்ளப்படாதவிடத்து யாழ்ப்பாணத்தில் பெரு-ம்போக வெங்காய செய்கைக்கான விதை வெங்காயத்துக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும் வடமராட்சிப் பிரதேசத்தில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. பல வருட கால இடைவெளிக்குப் பின்னர் 50 கிலோ வெங்காயம் 10 ஆயிரம் ரூபாவிற்கு விற்கப்படுகின்றது. இப்பிரதேசத்தில் உள்ள கம்பர்மலை, புலோலி, அல்வாய், திக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளிடமிருந்து விதை வெங்காயத்துக்காக வலிகாமம், புத்தளம் பிரதேச விவசாயிகள் போட்டி போட்டு வெங்காயத்தை கொள்வனவு செய்து வருகின்றனர். இந்நிலையில் காலபோக வெங்காயச் செய்கையின்போது கடும் மழை பெய்தமையினால் பெரும் எண்ணிக்கையான பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வெங்காயப்பயிரின் ஒரு பகுதி முற்றாகச் சேதமடைந்திருந்தது.
இதேவேளை இடையிட்டுப் பெய்த மழையினால் அழிவுற்ற வெங்காயப் பயிருக்கு எந்தவிதமான நஷ்டஈடும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
Related posts:
|
|