வடக்கின் கல்வி நிலை வீழ்ச்சி! உரியவர்களின் அக்கறையின்மையே காரணம்! –  டக்ளஸ் தேவானந்தா

Friday, April 15th, 2016

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் முடிவுகள் அண்மையில் வெளியாகியுள்ள நிலையில், தேசிய தரப்படுத்தல் ரீதியில் இதில் வடக்கு மாகாணம் கடைசி இடத்தைப் பெற்றிருப்பது வேதனை தருவதாக உள்ளதென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், கடந்த காலங்களில் வடக்கின் கல்வி நிலையை மேம்படுத்த நாம் அயராது பல நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம்.

யுத்தம் நிலவிய காலங்களில் தரைப் பாதை போக்குவரத்துகள் முடக்கப்பட்டிருந்த நிலையில்கூட கடல் மார்க்கமாக கல்வித் துறை சார்ந்த பல்வேறு உபகரணங்களை கொண்டு சென்றும். பல்வேறு ஏற்பாடுகளை முன்னெடுத்தும் வடக்கின் கல்வி நிலையை எம்மால் இயன்றளவில் காபாற்றியும், மேம்படுத்தியும் வந்துள்ளோம்.

யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் வடக்கின் கல்வி நிலையானது பாரிய சவாலுக்கு உட்பட்டிருந்தது. அதனையும் நாம் முறியடித்து, முற்றாக அழிந்தும், பாதிப்படைந்தும் காணப்பட்ட பல பாடசாலைக் கட்டிடங்களை மீளமைத்தும், புனரமைப்புச் செய்தும், பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியும், அனைத்து உபகரணங்களையும் வழங்கியும், விஞ்ஞான, தொழில்நுட்ப ஆய்வுக் கூடங்கள், கணனி கூடங்கள் போன்றவை அமைத்தும், ஆசிரிய வளங்களைப் போதுமானவரை பகிர்ந்தும் வடக்கின் கல்வி நிலையை மேம்படுத்தியிருந்தோம்.

ஆனால், துரதிஸ்டவசமாக இன்று வடக்கின் கல்வி நிலை மிகவும் வீழ்ச்சி கண்டிருப்பது வேதனைக்குரிய விடயமாகும். இந்த அரசைக் கொண்டு வந்தவர்கள் எனத் தம்மை இனங்காட்டிக்கொண்டு, இந்த அரசில் இணக்க அரசியல் ரீதியாகப் பங்கெடுத்து வருகின்ற தமிழ்த் தலைமைகளின் அக்கறையின்மையே இதற்குக் காரணமாகும். அதே நேரம், முன்னர் கல்விப் பணிப்பாளராக இருந்த ஒருவர் தற்போதைய வடக்கு மாகாண சபையில் கல்விக்குப் பொறுப்பான அமைச்சராக இருக்கிறார். அப்படி இருந்தும் வடக்கின் கல்வி நிலை இவ்வாறு வீழ்ச்சி கண்டு வருகிறதென்றால், இவர்களின் அக்கறையின்மை, திறமையின்மை, செயலாற்றலின்மை போன்றவையே இதற்குக் காரணமாகும். அதே நேரம், இத்தகைய ஒருவர் கல்விப் பணிப்பாளராக இருந்த நிலையில் அவரது செயற்பாடுகள் எப்படி இருந்திருக்கும்? என்ற கேள்வியும் இப்போது எமது மக்களிடையே எழுந்துள்ளது.

அதே நேரம், கிழக்கு மாகாணம் மேற்படி தேசிய தரப்படுத்தலில்  8வது இடத்தை – கடைசிக்கு முந்திய இடத்தைப் பெற்றுள்ளது. கிழக்கு மாகாணத்தில் கல்வி அமைச்சராக இருப்பவரும் ஏற்கனவே கல்வித்துறை சார்ந்த உயர் பதவி வகித்தவர் எனக் கூறப்படுகின்றது. அதே போன்று வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கல்வி அமைச்சுகளுக்கு பொறுப்பாக உள்ள இருவரும் ஒரே கூட்டணிக் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். தமிழ் மக்களின் மீட்பர்கள் எனக் கூறிக்கொண்டு இருக்கும் இவர்கள் இவ்வாறு எமது கல்வி நிலையை நாட்டின் இறுதியான இரண்டு நிலைகளுக்கு தள்ளிவிட்டிருப்பது வேதனைதரும் விடயமாகுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:


ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை மருந்து வகைகளின் விலைகளைக் கட்டப்படுத்துகின்ற பொறிமுறையை அறிமுக...
இந்தியாவிலிருந்து சேவையை முன்னெடுக்க துரித நடவடிக்கை - பலாலி விமான நிலையம் – காங்கேசன்துறை துறைமுகம்...
இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவர் ஜூலி ஜெ சங் - அமைச்சர் டக்ளஸ் விசேட சந்திப்பு – சமகால அரசியல் நில...