ரயில் கடவைகளின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட வேண்டும் – அமைச்சருக்கு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தல்!

வடக்கு மாகாணத்திற்கான பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் குறித்து உடனடி அவதானம் செலுத்தப்பட்டு, அவை பாதுகாப்பான கடவைகளாக மாற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவிடம் வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்கள், வடக்கு ரயில் கடவைகளில் ஏராளமான கடவைகள் இன்னமும் பாதுகாப்பற்ற நிலையிலேயே காணப்படுகின்றன. இது குறித்து நான் ஏற்கனவே பல முறை போக்குவரத்து அமைச்சின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ள போதிலும், இதுவரையில் எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில், கடந்த காலங்களில் பல விபத்துக்கள் ஏற்பட்டு பலர் கொல்லப்பட்டுள்ளனர். தற்போதும்கூட மேற்படி பாதுகாப்பற்ற ரயில் கடவைகளினால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு, தொடர்ந்தும் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்நிலை தவிர்க்கப்பட வேண்டும். எனவே, இவ்வாறான கடவைகளின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு போக்குவரத்து அமைச்சு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, வடக்கு மாகாணத்திற்கான ரயில் சேவையானது அதிக வருமானத்தை ஈட்டிக் கொடுக்கின்ற நிலையில், மேற்படி கடவைகளின் பாதுகாப்பினை உறுதிபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் புறக்கணிப்பு நிலை காணப்படக்கூடாது. மேலும், நாட்டில் பல பகுதிகளிலும் இத்தகைய பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் பல, நீண்ட காலமாகவே அதே நிலையிலேயே இருந்து வருகின்றன. இவை தொடர்பில் போக்குவரத்து அமைச்சர்களாக இருந்துள்ள எவரும் உரிய அக்கறை செலுத்தியதாக இல்லை.
மேலும், வடக்கு, கிழக்கு உட்பட ரயில் கடவை காப்பாளர்களாகப் பணி புரிந்து வருகின்ற பணியாளர்களது ஊதிய பிரச்சினை என்பது ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இது குறித்தும் போக்குவரத்து அமைச்சு உரிய நடவடிக்கை எடுத்து, உடனடியாக அவர்களது ஊதியப் பிரச்சினையைத் தீர்க்க முன்வர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாவலர் கலாசார மண்டப வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவுசெய்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
படகுகளில் கடற்றொழிலுக்கு செல்வோரின் எண்ணிக்கையை தொழிலாளர்களே தீர்மானிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ந...
கடலுணவுகளை அச்சமின்றி உட்கொள்ள முடியும் - அமைச்சர் தேவானந்தா உறுதியளிப்பு!
|
|