முருகன் விளையாட்டுக்கழக கிரிக்கெற் தொடர் இறுதிப் போட்டி:வெற்றிக் கிண்ணம் வழங்கினார் டக்ளஸ் தேவானந்தா
Sunday, March 12th, 2017தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவில் கழகங்களுக்கிடையே நடத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட பந்துப் பரிமாற்றங்களைக் கொண்ட கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய கழகத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றிக் கிண்ணத்தை வழங்கி வைத்தார்.
சங்கத்தானை முருகன் விளையாட்டுக்கழகம் நடத்திய குறித்த போட்டியின் பரிசளிப்பு நிகழ்வும் மட்டுவில் மோகனதாஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்றைய தினம் (12) கழகத் தலைவர் டிலக்ஷன் தலைமையில் நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து இறுதிப் போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட சாவகச்சேரி நியூபவர் மற்றும் மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழக வீரர்கள் பிரதம விருந்தினருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து அணிக்கு தலா பத்து பந்துப் பரிமாற்றங்களைக் கொண்ட இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் சாவகச்சேரி நியூபவர் அணி வெற்றியைப் பெற்று கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது.
பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா உரையாற்றியிருந்ததுடன் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற கழகத்திற்கு பரிசிலையும் வீரர்களுக்கான இதர பரிசில்களையும் வழங்கி கௌரவித்திருந்தார்.
இதனிடையே சாவகச்சேரி வடக்கு ஸ்ரீமுருகன் முன்பள்ளியின் கட்டுமானப் பணிகளையும் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டிருந்ததுடன் வசதிக் குறைபாடுகளுடன் இயங்கிவரும் சங்கத்தானை சனசமூக நிலையத்தையும் பார்வையிட்டிருந்தார்.
இதன்போது ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட மேலதிகச் செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் (ரங்கன்) தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி, சாவகச்சேரி நகர நிர்வாக செயலாளர் அமீன், சாவகச்சேரி பிரதேச நிர்வாக செயலாளர் மெடிஸ்கோ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Related posts:
|
|