பனை -தென்னை கள் உற்பத்தி விவகாரம் வர்த்தமானி அறிவிப்பு தவறானது!

பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து கள் இறக்குவது தடை என்ற ரீதியில் தற்போது ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்ற நிலையில், இவ்விடயத்துடன் தொடர்பான மதுவரிக் கட்டளைச்சட்டத்தின் 52வது அத்தியாயத்தின் திருத்தமானது, தவறானது என்றும் தெளிவற்றதென்றும் டக்ளஸ்தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், மேற்படி கட்டளைச் சட்டத்தின் 52வது அத்தியாயாத்தின் (ஆ) பிரிவில், ‘கித்துள் மரத்தைத் தவிர, கள்ளை உற்பத்தி செய்யும் மரம் எதிலும் கள்ளிறக்கப்படுதலாகாது’ என்றும், (ஈ) பிரிவில், ‘கித்துள் மரத்தைத் தவிர, வேறு ஏதேனும் மரத்திலிருந்து கள்ளு எடுக்கப்படுதல் அல்லது கீழிறக்கப்படுதல் ஆகாது’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே அத்தியாயத்தின் சிங்கள மொழி மூலமான (ஆ) பிரிவில் ‘கித்துள் மரம் தவிர்ந்த கள் உற்பத்தி
செய்யப்படும் எவ்விதமான மரங்களிலிருந்தும் சீவல் செயற்பாடுகள் செய்யக்கூடாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பதாக இதே அத்தியாயத்தில் இதே பிரிவுகளில் ‘கித்துள், பனை, தென்னை தவிர்ந்த ஏனைய மரங்களிலிருந்து கள்ளிறக்கப்படுதலாகாது’ என்றே குறிப்பிடப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, பனை மற்றும் தென்னை மரங்களில் கள் உற்பத்தி மேற்கொள்வதற்கு அனுமதி பத்திர முறைமையினை மீண்டும் கொண்டு வரும் நோக்கத்திலேயே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிய வருகின்றது. இந்த நிலையில் இருந்து பாரக்கின்றபோது, மேற்படி கட்டளைச் சட்டத் திருத்தமானது தவறானதும், தெளிவற்றதுமாகவே காணப்படுகின்றது.
இந்த நிலையில் எமது மக்களில் பெருந்தொகையினரின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்குகின்ற
மேற்படி விடயம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சருடன் கலந்துரையாடி, மேற்படி
தொழிற்துறையை இலகுவாக்குவதற்காகவும், எமது மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய வகையில்
மாற்றியமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்போவதாக டக்களஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|