தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு யார் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்களோ அவர்களோடு அணிதிரள்வதுதான் சிறந்தது – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!
Monday, May 6th, 2024மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு யார் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்களோ அவர்களோடு அணிதிரள்வதுதான் சரியானது என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த காலங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் சரியான முறையில் கையாளாளப்படாத காரணத்தினால்தான் அவர்கள் இத்தகைய நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் காலத்திலாவது தமிழ் மக்களின் பிரச்சினைகளைச் உண்மைத்தன்மையுடன் வெளிப்படையாக கையாளும் பட்சத்தில் விரைவில் தீர்வுகாணலாம். எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிழக்கு மாகாணத்திற்கு கடந்த இரு தினங்களாக விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் கடற்றொழில் சார் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை நேரில் சென்று அவதானித்திருந்ததுடன் அதற்கான தீர்வுகளையும் வழங்குவதற்கான ஏதுநிலைகளை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தலாகவும் வழங்கியிருந்தார்.
இதன்போது ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில் – சுருக்குவலைப் பயன்படுத்துதல் கிழக்கில் மாத்திரமல்ல நாடு பூராகவும் பரந்துபட்ட அளவில் இடம்பெற்று வருகின்றது. நான் செல்லும் இடம் எனலாம் அதனைத் தடை செய்யுமாறு கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. முடிந்தவரையில் சுருக்குவலைப் பயன்பாட்டைத் தடை செய்வதற்குரிய நடவடிக்கையை நான் எடுத்துக் கொண்டு வருகின்றேன்.
அதுபோல் மட்டக்களப்பு வாவியிலும் தொழில் செய்பவர்கள் பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றார்கள். அதற்குத் தீர்வு காணும் முகமாக ஒரு மாத்திற்குள் ஒரு குழுவை அமைத்து அதுதொடர்பில் ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்கள். அதனை வைத்துக் கொண்டு நாம் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
இதேவேளை இந்திய மீனவர்களின் அத்துமீறல் என்பது இரு நாடுகளுக்குமிடையிலான பிரச்சனையாகும். இது தொடர்பில் நாம் போச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம். அதுபோல் சட்டநடவடிக்கைகளையும் எடுத்துவருகின்றோம். இன்னும் பேச்சுவார்த்தைகளில் முழு நம்பிக்கை வத்து முயற்சிகளை எடுத்துள்ளோம்.
தற்போது மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் இரண்டு மாதங்களாக இந்திய மீனவர்கள் தொழிலுக்கு வரவில்லை. தேர்தல் முடிந்தவுடன் கூடிக் கதைக்கலாம் என அண்மையில் தமிழ்நாட்டு முதலமைச்சரிடமிருந்தும், புதுச்சேரி முதலமைச்சரிடமிருந்தும் எனக்கு அமைப்பு வந்திருந்தன. அதற்காக நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
இதேவேளை தமிழ் மக்களின் பிரச்சினைகள் தமிழ் தரப்பினர் சரியான முறையில் கையாளாத காரணத்தினால் தான் தமிழ் மக்கள் தற்போதைய நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். ஆனாலும் வருகின்ற காலத்திலாவது தமிழ் மக்களின் பிரச்சினைகளைச் சரியாக கையாளும் பட்சத்தில் விரைவில் தீர்வுகளை எட்டமுடியும் என நம்புகின்றேனர்.
30 வருடங்களாக இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஏற்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டம், மாகாணசபை முறைமையை ஆரம்பித்ததனூடாகத்தான் தமிழர்களுடைய அரசியல் உரிமைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என நான் சொல்லி வந்தேன்.
அதனை “செவிடன் காதில் ஊதிய சங்கு” போல் யாரும் கேட்கவில்லை. ஆனால் தற்போது அதுபற்றி பலரும் முணு முணுக்கின்றார்கள். அது நல்லவிடையமாகும். ஆனால் அன்று அதை எதிர்க்கும்போதும், இன்று அதனை ஆதரிக்கும்போதும் உண்மைத் தன்மையாக யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. உண்மைத்தன்மையாக முன்வருவார்களேயானால் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம்.
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமராச மற்றும் அனுர குமார திசாநாயக்க ஆகிய மூன்று வேட்பாளர்கள் பிரதானமானவர்களாக காணப்படுகின்றார்கள்.
இந்த மூவரில் ஒருவருடன் கலந்துரையாடி எமது வாக்குகளை உங்களுக்குத் தலராம் எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும் என்ற பேரம்பேசலைச் செய்து கலந்துரையாடினால்தான் ஒரு ஆரோக்கியமான சூழல் உருவாகுமே தவிர வெறுமனே பொது வேட்பாளர் என்பது வெறும் பம்மாத்து ஆகும்.
புண்ணுக்கு வலியா மருந்துக்கு வலியா என பார்த்தால் கடந்த கால தமிழ் அரசியல் மருந்துக்குத்தான் வலி என்ற அரசியலை முன்னெடுத்திருந்தனர். அது என்ன நிலமையில் மக்களைக் கொண்டு விட்டுள்ளது என்பதை புரிகின்றது. எனவே புண்ணுக்குத்தான் வலி இதனை தமிழ் மக்களும் சரிவர உணர்ந்து யார் தமது பிரச்சினைகளை ஆக்கபூர்வமாக முன்னெடுக்கின்றார்களோ அவர்களோடு அணிதிரள்வதுதான் சரியானது என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|