தமிழ் தேசியம் என்பது வெறும் தேர்தல் கோசமல்ல: அது எமது மக்கள் அடைந்தே தீரவேண்டிய மாபெரும் உரிமைச்சொத்து – டக்ளஸ் தேவானந்தா!

தமிழ் தேசியம் என்பது வெறும் தேர்தல் கோசமல்ல! அது எமது மக்கள் அடைந்தே தீரவேண்டிய மாபெரும் உரிமைச்சொத்து!தமிழ் தேசியத்தின் அடையாளங்களையும் அதன் அர்த்தங்களையும் எமது மக்கள் இன்னும் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. ஆனாலும் அதை பேசிக்கொண்டிருப்பவர்கள் மட்டுமே அதனால் கிடைக்கும் பயன்பாடுகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் தென்மராட்சி பிரதேசத்திற்கு விஜயம் செய்திருந்த டக்ளஸ் தேவானந்தா குறித்த பகுதியின் இரண்டு உள்ளூராட்சி பிரிவுகளை உள்ளடக்கிய வட்டார ரீதியிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்களுடனான சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
உரைஅவர் மேலும் உரையாற்றுகையில் –
தமிழ் தேசியம் என்னும் மாய மந்திரத்தை ஓதி ஓதி தேர்தலில் வெற்றிகளை பெறுகிறார்கள். உண்மையில் தமிழ் தேசியம் என்பது மாய மந்திரம் அல்ல. அது எமது மக்களின் உள்ளார்ந்த உணர்வு. ஒரு தேசிய இனத்தின் அடையாளம். எமது மக்களின் வரலாற்று பாரம்பரியம். அதை ஒரு போதை ஏற்றும் பொருளாக சிலர் பயன்படுத்தி வருகிறார்கள்.
அதனால் கிடைக்கும் பதவி நாற்காலிகளை தமது சொந்த நலன்களுக்காகவே அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். வட்டுக்கோட்டை தீர்மானத்தை எவ்வாறு தமது தேர்தல் கோசமாக பயன்படுத்தினார்களோ. அது போலவே இன்று வரை தமது அரசியல் இருப்புக்காக தேசியத்தை பயன் படுத்தி வருகிறார்கள்.
நான் தமிழ் தேசியத்தை தவறான நோக்கில் உச்சரிக்கும் கட்சித் தலைமைகளையே தவறு என்று கூறுகின்றேன். அந்த கட்சித் தலைமைகளுக்கு பின்னால் நிற்கும் அவர்களது கட்சி தொண்டர்களை தவறானவர்கள் என்று கூற வரவில்லை. தவறான கட்சி தலைமைகளுக்கு பின்னால் நிற்கும் தமிழ் தேசியத்தை நேசிக்கும் தொண்டர்கள் விழித்தெழ வேண்டும்.சரியான திசைவழியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
நாங்கள் தமிழ் தேசியத்திற்காக இரத்தம் சிந்தி போராடியவர்கள். மாபெரும் அர்ப்பணங்களை ஆற்றியவர்கள். தமிழ் தேசியத்தின் அடையாளங்களை மீட்பதற்கான எங்களது உரிமை போராட்டம் எங்களை ஒரு காலத்தில் பூட்டன் தலைநகர் திம்பு வரை செங்கம்பளம் விரித்து வரவேற்க வைத்தது.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் நாம் எமது உரிமை போராட்ட பாதையில் இருந்து சந்தி பிரித்து நடந்தாலும் நாம் நேசிக்கும் தமிழ் தேசியம் குறித்த எமது கொள்கையை யாருக்கும் தாரை வார்த்து கொடுத்துவிடவில்லை. சொல்லி செய்வோர் சிறியோர். சொல்லாமல் செய்வோர் பெரியோர். சொல்லியும் செய்யாதோர் கயவர். இப்படி எமது முன்னோர்கள் கூறுவார்கள்.
நாங்கள் சொல்லாமல் செய்பவர்கள். திருக்குறள் போன்று தமிழ் என்ற வார்த்தையை சொல்லாமேலேயே தமிழ் தேசியத்திற்காக உண்மையாகவே உழைப்பவர்கள். தயவு செய்து தமிழ் தேசியம் என்ற வார்த்தையை உங்கள் சுயலாப அரசியல் இருப்புக்காக பயன்படுத்தாதீர்கள்.
நீங்கள் விடும் அரசியல் தவறுகளுக்காக நீங்கள் உச்சரிக்கும் தமிழ் தேசியத்தையே எமது மக்கள் தவறாக எண்ணி விடுவார்கள். தமிழ் தேசியத்தை உச்சரித்து பிரதேச சபைகளை தமதாக்கியவர்கள் குப்பை கூளங்களை அகற்றவே வக்கற்று நிற்கிறார்கள். உள்ளூர் வீதிகளையே புனரமைக்க முடியாமல் நிற்கிறார்கள். இந்த இலட்சணத்தில் தமிழ் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளை எப்படி வென்றெடுத்து தரப்போகிறார்கள்? இது எமது மக்களின் கேள்வியாக உள்ளது என தெரிவித்தார்.
இதனிடையே கட்சியின் கடந்தகால செயற்பாடுகள் தொடர்பாகவும் வருங்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்திய டக்ளஸ் தேவானந்தா எமது கட்சியிடம் மேலும் முழுமையான அரசியல் பலத்தை மக்கள் தருவார்களானால் மக்கள் எதிர்கொள்ளும் தேவைகளும் எம்மினம் எதிர்கொண்டுவரும் அரசியல் சார் பிரச்சினைகளும் வெகுவிரைவில் தீர்க்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்),கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் ஜேர்மன் பிராந்திய அமைப்பாளர் மாட்டின் ஜெயா, கட்சியின் தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பாளர் நடுநாயகமூர்த்தி, மற்றும் கட்சியின் தென்மராட்சி பகுதிக்கான நிர்வாக உறுப்பினர்கள், அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Related posts:
|
|