கொழும்பு கடலில் ஆய்வுப் பணிகளில் நாரா தீவிரம் – அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல்!

கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடலுணவுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான பாதார்த்தங்கள் கொழும்பு துறைமுகத்தினை அண்டிய கடலில் கலந்துள்ளதா என்பதை கண்டறியுமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய ஆய்வுப் பணிகள் நாராவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்தியாவில் இருந்து இரசாயணக் கொள்கலன்களை ஏற்றி வந்த கப்பலில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ பரவல் காரணமாக கொள்கலன்களில் இருந்த இரசாயணப் பதார்த்தங்கள் மற்றும் கப்பலில் இருந்த எரிபாருள் மற்றும் ஓயில் போன்றன கடலில் கலந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகின்ற நிலையில் நாரா எனப்படும் தேசிய நீரியல்வள ஆய்வு நிறுவனம் மற்றும் சமுத்திர பாதுகாப்பு நிறுவனம் ஆகியன இணைந்து ஆய்வுகளை மேற்கொணடு வருகின்றன.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த நாரா நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் நவரட்ணராஜா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலுக்கு அமைய நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்ற நாரா விஞ்ஞானிகளினால் கடலில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான பதார்த்தங்கள் மற்றும் திரவங்களின் மாதிரிகள் சேகரித்து வரப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
குறித்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் கடல்வாழ் உயிரினங்களுக்கும் கடலுணவுகளுக்கும் பாதிபபுக்கள் ஏற்படக்கூடும் என்று தெரியவருமாயின் தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பேராசிரியர் நவரட்ணராஜா மேலும் தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடற்பகுதியில் நங்கூரமிட்டிருந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலின் காரணமாக, கடலில் விழுந்த 3 கொள்கலன்களில் எபோக்ஸி ரெஸின் (Epoxy Resin) என்ற இரசாயனம் அடங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த கொள்கலன்களில் அடங்கியிருந்த இரசாயனங்கள், சுவாசப் பிரச்சினைகள் மற்றும் ஒவ்வாமைகள் ஏற்படுத்தக்கூடியவை எனவும் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கடற்றொழில் அமைச்சின் நாரா நிறுவனத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|