கிளியூரான் விளையாட்டுக் கழகத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மைதான ஏற்பாடு !

கிளிநொச்சி மாவட்டத்தின் பல சிறந்த விளையாட்டு வீரர்களைக் கொண்ட கிளியூரான் விளையாட்டுக் கழகம் விடுத்த வேண்டுகோளுக்கமைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்பாடு செய்த விளையாட்டு மைதானத்தை ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த விளையாட்டு வீரர்களைக் கொண்ட இந்த விளையாட்டுக் கழகத்துக்கான விளையாட்டு மைதானம் இல்லாத பிரச்சினை நீண்டகாலமாக நிலவி வந்தது.
இதுகுறித்து, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் ஊடாக, ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிடம் இந்தக் கழகத்தினர் விடுத்த வேண்டுகோளுக்கமைய, உடனடியாக அவர்களுக்கான விளையாட்டு மைதானத்துக்கான ஏற்பாட்டை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டிருந்தார்.
இதனடிப்படையில் கிளிநொச்சி கனகபுரம் வீதியில, மத்திய பொருளாதார சந்தைக்கு அருகிலுள்ள காணியை இந்த விளையாட்டுக்கழகத்துக்கான தற்காலிக மைதானமாக மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனுடன் கலந்துரையாடி ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளர் வை.தவநாதன் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த மைதானத்தை நேற்றையதினம் நேரில் சென்று பார்வையிட்ட தவநாதன், மேற்கொண்டு கிளியூரான் விளையாட்டுக் கழகத்தினரின் உற்சாகமாக விளையாட்டுச் செயற்பாடுகளுக்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் விளையாட்டுக் கழக உறுப்பினர்களுக்கு உறுதியளித்தார்.
இதன்போது, ஒருங்கிணைப்புக்குழு மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன், ஒருங்கிணைப்புக்குழு உத்தியோகத்தரும், பச்சிலைப்பள்ளி பிரதேசசபை உறுப்பினருமான வசந்தரூபன் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|