காணாமல்போன இளம் குடும்பஸ்தரின் உறவுகளுக்கு டக்ளஸ் தேவானந்தா நேரில்ஆறுதல்!

வல்வெட்டித்துறை, பொலிகண்டிப் பகுதியில் கடற்றொழிலுக்குச் சென்று காணாமற்போன இளம் குடும்பஸ்தரின் உறவுகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.
கடந்த 09.06.2016 இரவு கடற்றொழிலுக்குச் சென்ற பலாலியைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டி கிழக்கு, நிலவன் குடியிருப்பு முகாமில் வசித்து வருபவருமான பீற்றர் அன்ரனி ரஜிந்தன் (26 வயது) என்ற இளம் குடும்பஸ்தர் இதுவரை வீடு திரும்பவில்லையென வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் நேரில் ஆராய்ந்தறியும் முகமாக டக்ளஸ் தேவானந்தா அங்கு விஜயம் மேற்கொண்டு காணாமற்போன குடும்பஸ்தரின் உறவுகளுடன் கலந்துரையாடி நிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டார்.
இந்நிலையில் காணாமற்போனவருடைய மனைவி மற்றும் உறவுகளுக்கு ஆறுதல் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, குறித்த நபர் இந்தியாவில் கரையொதுங்கியிருப்பின் அதுவிடயம் தொடர்பாக யாழ்ப்பாண இந்தியத் துணைத்தூதுவருடன் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடி நிலைமைகளைத் தெளிவுபடுத்தியிருந்ததுடன் முழுமையான தகவல்கள் இருப்பின் அவற்றைப் பெற்றுத் தருமாறும் கோரிக்கை விடுத்தார்.
இதனிடையே சம்பவம் தொடர்பில் நேரில் வருகைதந்து தமக்கு ஆறுதல் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தாவிடம் காணாமற்போனவரது உறவுகளும் அயலவர்களும் கண்ணீர்மல்க தமது நிலைமைகளை தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்), கட்சியின் வடமராட்சி பிரதேச நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் மற்றும் கட்சியின் பருத்தித்துறை பகுதி நிர்வாக செயலாளர் குமார் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.
Related posts:
|
|