கடலுணவு ஏற்றுமதியை வலுவூட்ட நண்டு சதை பதனிடும் தொழிற்சாலையின் மூன்றாவது கிளையை நானாட்டானில் திறந்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Tuesday, January 16th, 2024

நாடளாவிய ரீதியில் கடலுணவு உற்பத்தி ஏற்றுமதியை மையப்படுத்தி தொழிவாய்பை வழங்கி வரும்  தனியார் நிறுவனமொன்றின் நண்டு சதை பதனிடும் தொழிற்சாலையின் மூன்றாவது கிளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால்  நானாட்டன் பகுதியில் வைபவ ரீதியாக இன்று (16.01.2024) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் மீனவர்களிடம் இருந்து நண்டுகள் கொள்வனவு செய்யப்பட்டு அவற்றின் சதைகள் பிரித்தெடுக்கப்பட்டு பதனிடப்பட்டு, பின்னர் மேலதிக பொதியிடல் செயற்பாட்டுக்காக உற்பத்தி பொருள் பிரதான தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கும் விதமாக குறித்த கிளை வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனம் முன்னதாகவே மன்னார் மாவட்டத்தில் பேசாலை பகுதியில் டின் மீன் தொழிற்சாலை, மற்றும் ஐஸ் தொழிற்சாலை, மீன் உணவு, மற்றும் இலங்கையில் முதலாவது மீன் எண்ணை தொழிற்சாலைகளை நிறுவி வெற்றிகரமாக பல தொழில் வாய்ப்புக்களை உருவாக்கி இலாபம் ஈட்டி வருகின்ற நிலையில் தற்போது நானாட்டன் பகுதியில் உள்ள 40 பெண் தலைமைத்துவ குடும்ப பெண்களுக்கு குறித்த தொழிற்சாலை ஊடாக தொழில் வாய்பையும் உருவாக்கி வழங்கியுள்ளது.

குறித்த நிறுவனம் நாடளாவிய ரீதியில் 22 கிளைகளுடன் இயங்கி வருகின்ற நிலையில் சுமார் 800 முதல் 1000 நபர்களுக்கு மேல் தொழில் வாய்பை வழங்கி வருவதுடன் மேலதிகமாக மன்னார் மாவட்டத்தில் 200 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான தொழிவாய்ப்பையும் வழங்குவதற்கான தொழில் வெற்றிடங்களையும் உருவாக்கி உள்ளது.

இலங்கையில் கடந்த 5 வருடங்களாக உற்பத்தி முயற்சியில் ஈடுபடும் குறித்த நிறுவனம் கடல் உணவுகளை பதப்படுத்தி அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதன் ஊடாக நாட்டுக்கு மாதாந்தம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் அண்ணிய செலாவணியையும்  ஈட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

வடக்கின் அபிவிருத்தி குறித்து காலத்தை வீணடிக்காமல் ஆக்கப்பூர்வமாக செயற்பட முன்வர வேண்டும்! நாடாளு...
நுவரெலியா மற்றும் ஹட்டன் பகுதிகளில் தனித் தமிழ் கல்வி வலயங்களை ஏற்படுத்த நடவடிக்கை முடியுமா? - கல்வி...
வத்திராயன் கடல் பிரதேசத்தில் காணாமல்போன கடற்றொழிலாளர் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் அவதானம் – குடும்பத்த...