எனது மூச்சு எனது மக்களுக்கானது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Wednesday, November 22nd, 2023

எனது மக்கள் என்பதே எனது மூச்சு. அந்த வகையில் ஏழு எழுத்துக்களில் தான் எனது மூச்சு இருக்கின்றது. இது எனது மக்களுக்கானது. ஆங்கில மொழியிலே லக்கி செவன் என்பார்கள். அது எமது மக்களுக்கானது.

ஆனால், ஏனைய தமிழ்த் தேசியம் சப்புகின்ற சில அரசியல்வாதிகள் என்னைவிட எமது மக்களுக்கு அரைவாசி முன்னிலையிலேயே இருக்கின்றனர். அதாவது ஏழரைகளாக இருக்கின்றனர். அதனை மேலும் உறுதிப்படுத்துகின்ற வகையிலேயே அவர்களது செயற்பாடுகளும் இருந்து வருகின்றன என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் அலுவலங்கள்,  நாடாளுமன்றம், நாடாளுமன்ற அவைத் தலைவர் அலுவலகம் உட்பட, ஆணைக் குழுக்களும் உள்ளடங்களாக 25 நிறுவனங்கள் தொடர்பிலான வரவு – செலவுத் திட்டத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான முன்மொழிவின் வாத விவாதங்களில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

பொதுவாக அரசியல் என்பது மாறி, மாறியே அமைந்து வருகின்றது. அது எந்த நாடுகள் என்று பாகுபாடு பார்ப்பதில்லை. ஆனால், எனது அரசியல் என்பது எனது மக்கள் சார்ந்த நலன்கனை கருதியதாக மட்டுமே இன்னமும் தொடர்கிறது.

இயக்க அரசியல் கட்சிகள் சார்ந்த சில ஒட்டுண்ணிகளும், சுயலாப அரசியல் சார்ந்த சில ஒட்டுண்ணிகளும், ஊடகங்கள் சார்ந்த சில ஒட்டுண்ணிகளும் இல்லாதிருந்தால் பிரபாகரனின் மனோ நிலையில் சில மாற்றங்கள் வந்திருக்குமோ? எனவும் சில நேரங்களில் நான் சிந்திப்பதுண்டு.

இந்த ஒட்டுண்ணிகள்தான், அவர் ஒட்டகத்தில் வந்து அடிப்பார், தங்க ரதத்தில் வந்து அடிப்பார், யானை மீதேறி வந்து அடிப்பார், பூனை மீதேறி வந்து அடிப்பார் என்றெல்லாம் அந்த காலத்தில் அவரையும் உசுப்பேத்தி, ஒருவித அதீத மாயைக் கற்பனாவாத பிம்பத்தினை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்தன. இந்த பிம்பத்திலிருந்து இறங்கிவர இயலாத நிலையும் அவருக்கு இருந்திருக்கலாம்.

இத்தகைய அதே ஒட்டுண்ணிக் கூட்டத்தில் எஞ்சிய சில துகள்தான் இன்றும் புனைந்த, பொய்யான என்மீதான இத்தகைய கருத்துக்களை  திணித்துக் கொண்டிருக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0000

Related posts: