இலங்கை ஒரு மதச்சார்பற்ற நாடாக இருக்கவேண்டும் – டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

இலங்கை ஒரு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அதனூடாகவே இனங்களுக்கிடையே நிலையான ஒரு புரிந்துணர்வை உருவாக்க முடியும் என்று நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற கட்சியின் மாவட்ட நிர்வாகத்தினருடனான சந்திப்பின்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் –
நாடாளுமன்றத்தில் தற்போது புதிய அரசமைப்பு வரைவு ஒன்று முன் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஏனைய கட்சிகளுடன் நாமும் பல முன்மொழிவுகளை தெரிவித்துள்ளபோதிலும் எமது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியே மதச்சார்பற்ற நாடாக இலங்கை இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது என தெரிவித்த செயலாளர் நாயகம் தமிழ் மக்கள் இலங்கையர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக தமிழர் என்ற அடையாளத்தையோ அன்றி தமிழராக இருக்க வேண்டும் என்பதற்காக இலங்கையர் என்ற அடையாளத்தையோ கைவிடவும் தயார் இல்லை. அவர்கள் இலங்கையர்களாகவும் தமிழராகவும் இருக்கவே விரும்புகின்றார்கள் என்று சுட்டிக்காட்டிய அவர் கடந்த கால தமிழ், சிங்கள அரசியல்வாதிகள் தத்தமது சுயலாப அரசியலுக்காக அதை ஆரோக்கியமாக எடுத்துக்கொள்ளாமைதான் எமது நாடு இருட்டில் மூழ்கடிக்கப்பட்டது என்றும் தெரிவித்ததுடன் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது கொள்கை நிலைப்பாட்டில் நாம் எப்போதும் உறுதியாகவே இருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.
Related posts:
|
|