ஆற்றலும் அக்கறையும் உள்ளவர்களிடமே அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் – பொன்நகரில் டக்ளஸ் தேவானந்தா!

அதிகாரங்களை வழங்கும்போது ஆற்றலும் அக்கறையும் உள்ளவர்களிடம் வழங்கும்போதுதான் நமது இனம் இழந்த வாழ்வியலையும் உரிமைகளையும் வென்றெடுக்கமுடியும். ஈழமக்கள் ஜனநாயக கட்சியினராகிய நாம் எமது மக்களது உரிமைகள் மற்றும் வாழ்வியல் விடயங்களில் அதிக அக்கறையுடனும் ஆற்றலுடனும் யதார்த்த வழிமுறையூடாக செயற்பட்டுவருகின்றபோதிலும் அவற்றை பெற்றுத்தருவதற்கான அரசியல் அதிகாரம் குறைவாக உள்ளதால் தமிழ் மக்களுக்கான தீர்வுகளை முழுமையாக பெற்றுத்தரமுடியாதுள்ளது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா பொன்நகர் பகுதி மக்களுடனான சந்திபின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது –
நாம் காட்டிய பாதையே இன்று தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வை பெற்றுத்தருவதற்கான வழியைக்காட்டி நிற்கின்றது. நான் எடுத்துரைந்த இந்த யதார்த்த நிலையை இதர தமிழ் அரசியல் தரப்பினரும் இலங்கை இந்தய ஒப்பந்தகாலத்தில் ஏற்றிருந்தால் இன்று தமிழ் மக்கள் எதிர்கொண்ட வரலாற்று துயரங்களை தடுத்து நிறுத்தி உரிமைகளுடன்கூடிய வாழ்வியல் சூழ்நிலையை உருவாக்கியிருக்க முடியும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஈழவிடுதலைப் போராட்டத்தில் நானும் ஒரு அதி உன்னத பங்கை வகித்ததனால் எமது மக்கள் கண்டுவந்த துன்ப துயரங்களை நான் நன்கறிந்துகொண்டுள்ளேன். இதன் காரணத்தால் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் வாழ்வியல் தேவைகளை தூக்கிநிறுத்த அயராது உழைத்துவருகின்றேன்.
மக்கள் எமக்கு கொடுத்துவரும் அரசியல் அதிகாரங்களின் அளவைக்கொண்டுதான் நாம் எமது மக்களின் வாழ்வாதார சுமைகளை தீர்த்துவருகின்றோம். கடந்த காலங்களில் மக்களாகிய நீங்கள் தெரிவுசெய்த தவறான அரசியல் தலைமைகளின் தெரிவுகளை ஒருமுறை சீர்தூக்கி பாருங்கள். இதனூடாகத்தான் நீங்கள் ஒரு தெளிவான நிலைக்கு வரமுடியும் என நம்புகின்றேன். பழிவாங்கும் அரசியலையோ அன்றி சுயநல அரசியலையோ நான் ஒருபோதும் மேற்கொண்டது கிடையாது. அது எமது கட்சியின் கொள்கையும் அல்ல. கிடைக்கும் அதிகாரங்களைக்கொண்டு எமது மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதுதான் எமது பணியாக இருந்துவருகின்றது.
தமிழர் உரிமைக்காக உயிரையும் தசையையும் கொடுத்த தியாகிகளின் தியாகத்தால் கிடைக்கப்பெற்றதுதான் 13 ஆவது திருத்தச்சட்டம். அதன் பிரகாரம் உருவானதே இன்று கூட்டமைப்பினர் வசப்படுத்தியுள்ள வடக்கு மாகாணசபை. இந்த சபையை ஆற்றலில்லாதவர்களிடம் நீங்கள் கொடுத்ததன் விழைவுகள்தான் இன்று எமது மக்கள் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளமைக்கு காரணமாக அமைந்துள்ளது.
அதிகாரங்களை வழங்கும்போது ஆற்றலும் அக்கறையும் உள்ளவர்களிடம் வழங்கும்போதுதான் நமது இனம் இழந்த வாழ்வியலையும் உரிமைகளையும் வென்றெடுக்கமுடியும். ஈழமக்கள் ஜனநாயக கட்சியினராகிய நாம் எமது மக்களது உரிமைகள் மற்றும் வாழ்வியல் விடயங்களில் அதிக அக்கறையுடனும் ஆற்றலுடனும் யதார்த்த வழிமுறையூடாக செயற்பட்டுவருகின்றபோதிலும் அவற்றை பெற்றுத்தருவதற்கான அரசியல் அதிகாரம் குறைவாக உள்ளதால் தமிழ் மக்களுக்கான தீர்வுகளை முழுமையாக பெற்றுத்தரமுடியாதுள்ளது.
இன்று முல்லை மக்களிடம் ஒரு தெளிவான நிலைப்பாடு ஏற்பட்டுள்ளதைப்போன்று ஏனைய தமிழ் மக்களும் சரியான பாதையை நோக்கி வருவார்களாக இருந்தால் தமிழ் மக்கள் வடிக்கும் கண்ணீருக்கு விரைவில் முடிவுகண்டு உரிமையுடன் கூடிய ஒளிமயமான வாழ்க்கைப்பாதையை உருவாக்கித்தர முடியும் என்று நான் நம்புகின்றேன் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|